பழம்பெரும் ஒளிப்பதிவாளர் பி.என்.சுந்தரம் மரணம்... படப்பிடிப்புகள் ரத்து!

தங்கப்பதக்கம், பட்டிக்காடா பட்டணமா, எங்கள் வீட்டு பிள்ளை, எங்க ஊரு ராஜா, உயர்ந்த மனிதன் உள்பட எம்ஜிஆர், சிவாஜியின் பல சூப்பர் ஹிட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் பி.என்.சுந்தரம்.
இவர், கடந்த சில மாதங்களாக உடல்நல குறைவாக இருந்தார். நேற்று மாலை 4 மணிக்கு அவர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 76. பி.என்.சுந்தரம் உடல் தகனம் சென்னை பெசன்ட்நகரில் உள்ள சுடுகாட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு நடக்கிறது.
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் பிஎன் சுந்தரம். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய 4 மொழி படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் அவர். சில மலையாள படங்களை இயக்கியுள்ளார்.
அவருடைய உடல் சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீராம் காலனியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. ஏராளமான சினிமா உலக பிரமுகர்கள் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
அவரது சேவைகளை மனதில் கொண்டு, அவரை கவுரவிக்கும் வகையில் படப்பிடிப்புகள் அனைத்தும் இன்று (செவ்வாய்க்கிழமை) ரத்து செய்யப்படுவதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும், தென் இந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனமும் இணைந்து அறிவித்துள்ளன.
மரணம் அடைந்த பி.என்.சுந்தரத்துக்கு பார்வதி என்ற மனைவியும், 2 மகள், ஒரு மகனும் உள்ளனர்.
இரங்கல் தெரிவிக்க...


Click it and Unblock the Notifications











