twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பச்சைப் புரட்சி... புதிய அமைப்பு தொடங்கினார் நடிகர் விக்ரம்!!

    By Shankar
    |

    சென்னை: பச்சைப் புரட்சி எனும் புதிய அமைப்பைத் தொடங்கினார் நடிகர் விக்ரம். இந்த அமைப்பு மூலம் தமிழகம் முழுவதும் முதல்கட்டமாக 1 லட்சம் மரங்களை நட அவர் திட்டமிட்டுள்ளார்.

    தமிழ்ப் பட உலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான விக்ரம் சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் 'ஹபிடேட்' என்ற அமைப்பின் இளைஞர் பிரிவு தூதராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் 23-வது நிர்வாகக் குழு கூட்டம் கென்யா நாட்டின் தலைநகரான நைரோபியில் நடந்தது.

    அதில் கலந்து கொண்ட விக்ரம், நேற்று சென்னை திரும்பினார். மாலையில் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது பச்சைப் புரட்சி, கற்க கசடற எனும் இரு புதிய திட்டங்களை அறிவித்தார்.

    மேலும் அவர் கூறியது:

    ஐக்கிய நாடுகள் சபையின் 'ஹபிடேட்' தூதராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டதை மிகப் பெரிய கவுரவமாக கருதுகிறேன்.

    இந்த சமுதாயம் எனக்கு நிறைய தந்திருக்கிறது. எனக்கு ஒரு பொறுப்பு வந்திருக்கிறது. அதற்காக சமுதாயத்திற்கு நான் ஏதாவது செய்தாக வேண்டும்.

    'பச்சைப்புரட்சி'

    இதற்காக 'பச்சைப் புரட்சி' என்ற அமைப்பை நான் தொடங்கி இருக்கிறேன். இந்த அமைப்பின் மூலம் என் ரசிகர்களைப் பயன்படுத்தி தமிழ்நாடு முழுவதும் 1 லட்சம் மரங்களை நடுவதற்கு திட்டமிட்டிருக்கிறேன்.

    இந்த வேலைகளை இன்றே தொடங்கிவிட்டேன். சென்னை நந்தனத்தில் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் முதல் கட்டமாக 100 செடிகள் நடப்பட்டுள்ளன.

    இதற்காக ஒரு கமிட்டியை உருவாக்கியிருக்கிறோம். அதில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளும், நண்பர்களும் உறுப்பினர்களாக உள்ளனர்.

    கற்க கசடற...

    இதையடுத்து 'கற்க கசடற' என்ற அமைப்பையும் தொடங்க திட்டமிட்டுள்ளேன். இதன் மூலம் குடிசைப் பகுதி குழந்தைகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு கல்வி அறிவை வளர்க்க விரும்புகிறேன்.

    நான் படங்களில் மொட்டை போட்டால் என் ரசிகர்களும் அதே போல் மொட்டை அடித்துக் கொள்கிறார்கள். நான் 'பிரெஞ்ச்' தாடி வைத்தால் அவர்களும் 'பிரெஞ்ச்' தாடி வைத்துக் கொள்கிறார்கள். காசி படத்தில் நான் கண் பார்வையற்றவனாக நடித்த போது கண் தானம் செய்வதாக அறிவித்தேன். என்னுடன் ஆயிரம் ரசிகர்களும் கண் தானம் செய்தார்கள். அந்த நிகழ்ச்சி என்னை பிரமிக்க வைத்தது.

    இப்போது நாடு செழிக்க, சுற்றுச் சூழல் நன்றாக இருக்க நான் மரம் நடப் போகிறேன். ஒன்றிரண்டல்ல... லட்சக்கணக்கில். எனவே என் ரசிகர்களும் மரம் நடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவற்றை வெறும் கணக்குக்காக நடாமல், அவற்றை முறையாகப் பராமரிக்கவும் எங்கள் கமிட்டி திட்டமிட்டுள்ளது.

    எனவே 'பச்சைப் புரட்சி' இயக்கத்தில் என் ரசிகர்களை முழுமையாக ஈடுபடுத்த விரும்புகிறேன். தமிழ்நாடு மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளாவிலும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த முடிவு செய்திருக்கிறேன்," என்றார்.

    ஏற்கெனவே விக்ரம் பவுண்டேஷன் எனும் தனது அமைப்பின் மூலம் ஏராளமான நற்பணிகளை விக்ரம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

    பேட்டியின் போது நடிகர் விக்ரம் ரசிகர் மன்ற தலைவர் சூரியநாராயணன், விக்ரமின் மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

    English summary
    Vikram, one of the top stars in Tamil cinema has announced tow important project yesterday. As the youth envoy of UN Habitat Vikram, he announced 'Pachchai Puratchi' for the betterment of Environment and Karka Kasadara for the improvement in poor people education. The aim of Karka Kasadara is to identify school and college drop outs and help them to stand on their own legs.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X