Don't Miss!
- News புறம்போக்கு நிலம்.. நத்தம் இருக்கட்டும்.. புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வாங்கலாமா? அரசு சொல்வது என்ன
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
பச்சைப் புரட்சி... புதிய அமைப்பு தொடங்கினார் நடிகர் விக்ரம்!!
சென்னை: பச்சைப் புரட்சி எனும் புதிய அமைப்பைத் தொடங்கினார் நடிகர் விக்ரம். இந்த அமைப்பு மூலம் தமிழகம் முழுவதும் முதல்கட்டமாக 1 லட்சம் மரங்களை நட அவர் திட்டமிட்டுள்ளார்.
தமிழ்ப் பட உலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான விக்ரம் சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் 'ஹபிடேட்' என்ற அமைப்பின் இளைஞர் பிரிவு தூதராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் 23-வது நிர்வாகக் குழு கூட்டம் கென்யா நாட்டின் தலைநகரான நைரோபியில் நடந்தது.
அதில் கலந்து கொண்ட விக்ரம், நேற்று சென்னை திரும்பினார். மாலையில் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது பச்சைப் புரட்சி, கற்க கசடற எனும் இரு புதிய திட்டங்களை அறிவித்தார்.
மேலும் அவர் கூறியது:
ஐக்கிய நாடுகள் சபையின் 'ஹபிடேட்' தூதராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டதை மிகப் பெரிய கவுரவமாக கருதுகிறேன்.
இந்த சமுதாயம் எனக்கு நிறைய தந்திருக்கிறது. எனக்கு ஒரு பொறுப்பு வந்திருக்கிறது. அதற்காக சமுதாயத்திற்கு நான் ஏதாவது செய்தாக வேண்டும்.
'பச்சைப்புரட்சி'
இதற்காக 'பச்சைப் புரட்சி' என்ற அமைப்பை நான் தொடங்கி இருக்கிறேன். இந்த அமைப்பின் மூலம் என் ரசிகர்களைப் பயன்படுத்தி தமிழ்நாடு முழுவதும் 1 லட்சம் மரங்களை நடுவதற்கு திட்டமிட்டிருக்கிறேன்.
இந்த வேலைகளை இன்றே தொடங்கிவிட்டேன். சென்னை நந்தனத்தில் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் முதல் கட்டமாக 100 செடிகள் நடப்பட்டுள்ளன.
இதற்காக ஒரு கமிட்டியை உருவாக்கியிருக்கிறோம். அதில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளும், நண்பர்களும் உறுப்பினர்களாக உள்ளனர்.
கற்க கசடற...
இதையடுத்து 'கற்க கசடற' என்ற அமைப்பையும் தொடங்க திட்டமிட்டுள்ளேன். இதன் மூலம் குடிசைப் பகுதி குழந்தைகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு கல்வி அறிவை வளர்க்க விரும்புகிறேன்.
நான் படங்களில் மொட்டை போட்டால் என் ரசிகர்களும் அதே போல் மொட்டை அடித்துக் கொள்கிறார்கள். நான் 'பிரெஞ்ச்' தாடி வைத்தால் அவர்களும் 'பிரெஞ்ச்' தாடி வைத்துக் கொள்கிறார்கள். காசி படத்தில் நான் கண் பார்வையற்றவனாக நடித்த போது கண் தானம் செய்வதாக அறிவித்தேன். என்னுடன் ஆயிரம் ரசிகர்களும் கண் தானம் செய்தார்கள். அந்த நிகழ்ச்சி என்னை பிரமிக்க வைத்தது.
இப்போது நாடு செழிக்க, சுற்றுச் சூழல் நன்றாக இருக்க நான் மரம் நடப் போகிறேன். ஒன்றிரண்டல்ல... லட்சக்கணக்கில். எனவே என் ரசிகர்களும் மரம் நடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவற்றை வெறும் கணக்குக்காக நடாமல், அவற்றை முறையாகப் பராமரிக்கவும் எங்கள் கமிட்டி திட்டமிட்டுள்ளது.
எனவே 'பச்சைப் புரட்சி' இயக்கத்தில் என் ரசிகர்களை முழுமையாக ஈடுபடுத்த விரும்புகிறேன். தமிழ்நாடு மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளாவிலும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த முடிவு செய்திருக்கிறேன்," என்றார்.
ஏற்கெனவே விக்ரம் பவுண்டேஷன் எனும் தனது அமைப்பின் மூலம் ஏராளமான நற்பணிகளை விக்ரம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
பேட்டியின் போது நடிகர் விக்ரம் ரசிகர் மன்ற தலைவர் சூரியநாராயணன், விக்ரமின் மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.