சன் பேப்பர் மில் வழக்கில் சக்சேனாவுக்கு ஜாமீன்!
கோவை: சன் பேப்பர் மில்லை அபகரித்தார் என தொடரப்பட்ட வழக்கில் சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்சேனாவுக்கு நிபந்தனை ஜாமீனில் வழங்கப்பட்டது.
கோவை அருகே உள்ள பேப்பர் மில் அபகரிப்பு தொடர்பான வழக்கில் சன்பிக்சர்ஸ் தலைமை நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு வக்கீல் என்.செந்தில்குமார் உடுமலை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
கடந்த 19-ந் தேதி தாக்கல் செய்யப்பட்ட இந்த ஜாமீன் மனு உடுமலை மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில் உடுமலை அரசு வக்கீல் டி.ராஜசேகரனும், ஹன்ஸ்ராஜ் சக்சேனா தரப்பில் சென்னை ஐகோர்ட்டு வக்கீல் என்.செந்தில்குமாரும் ஆஜராகி வாதாடினார்கள்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட மாஜிஸ்திரேட்டு என்.சர்மிளா, மறு உத்தரவு வரும் வரை தினமும் காலை 10 மணிக்கும், மாலை 5 மணிக்கும் திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் ஹன்ஸ்ராஜ் சக்சேனாவை ஜாமீனில் விடுதலை செய்து உத்தரவிட்டார்.


Click it and Unblock the Notifications