நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு எதிராக சதி - தெலுங்குதேசம் குற்றச்சாட்டு

மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் என்.டி.ராமாராவின் மகனும், முன்னணி நடிகருமான பாலகிருஷ்ணா கடந்த 2004-ம் ஆண்டு ஜூன் மாதம் படத் தயாரிப்பாளர் பெல்லம் கொண்ட சுரேஷ் என்பவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டார். இதில் காயம் அடைந்த அவர் உயிர் தப்பினார்.
தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவர் இவர். ரஜினியின் சிவாஜி தெலுங்குப் பதிப்பின் உரிமையாளர் இவர்தான்.
இவ் வழக்கு ஹைதராபாத் செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. குற்றம் சரி வர நிரூப்பிக்கபடாததால் பாலகிருஷ்ணா அண்மையில் விடுவிக்கப்பட்டார்.
இந் நிலையில் சிரஞ்சீவியை சமாளிக்கும் வகையில் பாலகிருஷ்ணா தெலுங்கு தேசம் கட்சியில் இழுத்தார் சந்திரபாபு நாயுடு.
குண்டூரில் பிரமாண்ட இளைஞர் மாநாடு நடத்தினார். அதில் காங்கிரஸ் ஆட்சியை அகற்றப் பாடுபடுவேன் என்று பேசினார். இது காங்கிரஸ் தலைவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் சிரஞ்சீவியோடு பாலகிருஷ்ணாவும் அரசியலுக்கு வந்துள்ளதால் காங்கிரஸ் ஆட்டங்கண்டுள்ளது.
இந் நிலையில் இப்போது பாலகிருஷ்ணா மீதான துப்பாக்கிச் சூடு வழக்கை மீண்டும் விசாரிக்க காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இதை எதிர்த்து தெலுங்கு தேசம் கட்சி இப்போதே அரசியலை ஆரம்பித்துவிட்டது.
நாடாளுமன்ற தெலுங்கு தேசம் கட்சி தலைவர் எர்ரன் நாயுடு இதுகுறித்து நிருபர்களிடம் கூறியதாவது:
பாலகிருஷ்ணா மீதான துப்பாக்கிச் சூடு வழக்கை செசன்ஸ் கோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது. ஆந்திர அரசுக்கு அந்த தீர்ப்பில் சம்மதம் இல்லா விட்டால் 90 நாட்களில் கோர்ட்டில் மேல் முறையீடு செய்திருக்க வேண்டும். ஆனால் அப்படிச் செய்யாமல் பழிவாங்க நேரம் பார்த்திருந்ததுபோல் தங்கள் வேலையைக் காட்டுகிறார்கள்.
தற்போது பாலகிருஷ்ணா தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்து முழு நேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். பாலகிருஷ்ணா பிரசாரத்தால் காங்கிரஸ் பயந்து விட்டது. இதனால் அவரது செல்வாக்கை குறைப்பதற்கு காங்கிரஸ் மீண்டும் பால கிருஷ்ணா மீதான வழக்கை நடத்த சதி செய்து வருகிறது. பாலகிருஷ்ணா எந்த வழக்குகளையும் சந்திக்கத் தயாராக உள்ளார். தெலுங்கு தேசம் இதை லேசாக எடுத்துக் கொள்ள முடியாது என்றார்.
இந்த துப்பாக்கிச் சூடு வழக்கை இழுத்து மூடியதில் முதல்வராக இருந்த நாயுடுவுக்கு பெரும் பங்கு இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











