வருமான வரி தாக்கல் செய்வது குறித்து சினிமாத் துறையினருக்கு ஆலோசனை
சென்னை: வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வது எப்படி என்பது குறித்து திரைப்படத் துறையினருக்கும், சின்னத் திரையைச் சேர்ந்தவர்களுக்கும் வருமான வரித்துறை அதிகாரிகள் விளக்கம் தந்தனர். பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினர்.
மாதச் சம்பளம் வாங்குவோர்தான் நாட்டில் முறையாக வருமான வரிகளை கட்டுவோர் ஆவர். இவர்களுக்கு அலுவலகத்திலேயே வருமான வரியை பிடித்தம் செய்து விடுவதால், இவர்கள் மட்டுமே முறையாக, தவறாமல் வருமான வரியை அரசுக்கு செலுத்தி வருகின்றனர்.
அதேசமயம், தாங்களாக வருமான வரியைக் கட்டும் திரைப்படத் துறையினர், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் பெருமளவில் வரி ஏய்ப்புகளில் ஈடுபடுவது தொடர் கதையாகவே உள்ளது.
குறிப்பாக திரைப்படத் துறையினரில் பலர் முறையாக வரி கட்டுவதில்லை. இதனால் அவ்வப்போது ரெய்டு நடப்பது சகஜமாகி விட்டது.
சமீபத்தில் கூட பல்வேறு தமிழ் சினிமா நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்டோர் வீடுகளில் ரெய்டு நடந்தது. இதில் பல்வேறு வரி ஏய்ப்புகள் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாயின.
இந்த நிலையில், திரைப்படம் மற்றும் டெலிவிஷன் துறையை சேர்ந்தவர்கள் வருமான வரி செலுத்துவது குறித்த கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது.
வருமானவரித்துறை ஏற்பாடு செய்திருந்த இந்த கருத்தரங்குக்கு வருமான வரி தலைமை ஆணையாளர் ஜி.சி.ஜெயின் தலைமை தாங்கினார்.
இதில், தமிழ்த் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி துறையைச் சேர்ந்த சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அவர்களுக்கு வருமான வரி செலுத்துவது தொடர்பான நடைமுறைகள், விண்ணப்பம் தாக்கல் செய்வது, வருமான வரி சலுகைகள் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். குறிப்பிட்ட காலத்திற்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்து சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை தவிர்த்திடுமாறும் அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.


Click it and Unblock the Notifications











