பீப் பாடல்- சிம்பு, அனிருத்துக்கு கோவை போலீஸ் மீண்டும் சம்மன்! ஜன.2-ல் ஆஜராக உத்தரவு!!
கோவை: சர்ச்சைக்குரிய பீப் பாடல் விவகாரத்தில் ஜன.2-ந் தேதி நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் ஆஜராக வேண்டும் என்று கோவை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
கொந்தளிப்பை ஏற்படுத்தும் வகையில் கொச்சையான ஆபாசப் பாடல் ஒன்றை சிம்பு பாட அதற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்த பாடல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
பெண்களை மிக மோசமாக இழிவுபடுத்தும் இந்த பாடலை பாடிய சிம்பு, இசையமைத்த அனிருத் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவையில் முதலில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து சிம்புவும் அனிருத்தும் 19-ந் தேதி ஆஜராக போலீசார் உத்தரவிட்டிருந்தனர்.

இதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் இருவரும் மனுத்தாக்கல் செய்திருந்தனர். ஆனால் இருவரது மனுவையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
ஆனால் சிம்பு நேரில் ஆஜராக 1 மாத காலம் அவகாசம் கோரியிருந்தார்; அனிருத்தோ தமக்கு இதில் சம்பந்தமே இல்லை எனக் கூறி கனடாவிலேயே தங்கிவிட்டார். இதன் பின்னர் சிம்பு மீது சென்னை போலீசாரும் வழக்குப் பதிவு செய்தனர்.
பின்னர் சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர் வருத்தம் தெரிவித்து விளக்கம் ஒன்றை கொடுத்தார். சிம்புவும் தாம் செய்தது சரியானதே என ஒரு விளக்கம் கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் சிம்புவும் அனிருத்தும் ஜனவரி 2-ந் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டு கோவை போலீசார் இன்று மீண்டும் ஒரு சம்மனை அனுப்பியுள்ளார். இதனையும் இருவரும் நிராகரிப்பார்களா? அப்போது போலீஸ் கைது நடவடிக்கை மேற்கொள்ளுமா? என்பது தெரியவரும்.


Click it and Unblock the Notifications











