Rajini: கூட்டத்தைப் பார்த்ததும் விட்டுட்டு எஸ்கேப் ஆன ரஜினிகாந்த்.. படப்பிடிப்புத் தளத்திலேயே அழுத மீனா..
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைவாழ்க்கையில் தனது 50வது ஆண்டை நிறைவு செய்துள்ளார். அவருக்கு பல திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என அனைத்து தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாகவும் அதன் பின்னர் அவருக்கு ஜோடியாகவும் நடித்த நடிகை மீனா ரஜினியுடன் தான் பணியாற்றியது தொடர்பாக புதிய தலைமுறை சேனலுக்கு அளித்த பேட்டியில் பல சுவாரஸ்யமான சம்பவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
அந்த பேட்டியில், " ரஜினி சார் இந்த 50 ஆண்டுகளில் எத்தனை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ஒரே படத்தில் மூன்று கதாபாத்திரங்கள், இரண்டு கதாபாத்திரங்கள் என ஸ்டைல் மட்டுமல்ல நடிப்பிலும் வித்தியாசம் காட்ட முடியும் என நிரூபித்தவர். அவர் படப்பிடிப்பு தளத்திற்கு வருகிறார் என்ற தகவல் வந்தாலே போதும், அனைவருக்கும் சார்ஜ் போட்டது போல ஆகிவிடும். அவர் வந்துவிட்டால் அவரிடம் இருக்கும் வேகமும் சுறுசுறுப்பும் மற்றவர்களுக்கும் பரவிவிடும்.
ரஜினி சார் எப்போதுமே வேகமாக நடப்பார். அப்போது எப்படி வேகமாக நடப்பாரோ அதேபோலத்தான் இப்போதும் அதே வேகத்துடன் நடக்கிறார். முத்து படத்தின் படப்பிடிப்பின்போது வெளியில் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்தது. அப்போது பவுன்சர்ஸ் என யாரும் இல்லை. மக்கள் அதிகப்படியாக திரண்டு எங்களை நோக்கி வந்து கொண்டு உள்ளார்கள். நான் எழுந்து நிற்பதற்குள் ரஜினி சார் வெகு தூரம் நடந்து சென்று விட்டார்.

அழுகை: அதன் பின்னர் அந்த மக்களிடம் இருந்து என்னை உதவியாளர்களும் லைட் மேன்களும்தான் காப்பாற்றினார்கள். அப்போது நான் அழுதேவிட்டேன். ரவிக்குமார் சாரும் அங்கு இல்லை. அதன் பின்னர் இவர்கள் எல்லாம் இருந்த இடத்திற்கு வந்து அமர்ந்து கொண்டேன். யாரிடமும் பேசவில்லை. அப்போது ரவிக்குமார் சார், என்ன ஆச்சு என்றுதான் கேட்டார். நான் அழுதுவிட்டேன்.
சமாதானம்: அதன் பின்னர் ரவிக்குமார் சாரும் ரஜினி சாரும் என்னை சமாதானப்படுத்தினார்கள். அது மகாராணி காட்சி படமாக்கப்பட்டபோது நடந்தது. அதனால் நான் மகாராணி போலவே படப்பிடிப்புத் தளத்தில் நடந்து கொண்டேன். ரஜினி சார் வழக்கமாகவே வேகமாகத்தான் நடப்பார். அவரது மனைவியால் கூட அவருக்கு இணையாக நடக்க முடியாது. இதை நானே அவரிடம் கூறியுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார். இவரது இந்த பேட்டி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











