65 சினிமா இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் உடல் தானம்... முதல்வரிடம் உறுதிப் பத்திரம் அளித்தனர்!
சென்னை: தமிழ் சினிமாவைச் சேர்ந்த 65 இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்கள் 65 பேர் உடல் தானம் அளிக்க விரும்பி அதற்கான உறுதிப் பத்திரங்களை முதல்வர் ஜெயலலிதாவிடம் வழங்கினர்.
இதுகுறித்து தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

இறந்த பின் எரிக்கப்படும் அல்லது புதைக்கப்படும் உடல் எந்தப் பயனும் இல்லாமல் போகிறது. உடலை மருத்துவ ஆய்வுக்கு பயன்படுத்தி பல நோய்களை குணமாக்கும் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடனும், உடல் தானத்தில் தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ வேண்டுமென்ற விருப்பத்துடனும் தன்னார்வ உடல் தானத்துக்கு திரைப்பட இயக்குநர்கள் முன்வந்துள்ளனர்.
இதையடுத்து, தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தைச் சேர்ந்த இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் 62 பேர், இவர்களது குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் என மொத்தம் 64 பேர் தன்னார்வ உடல் தானத்துக்கு முன்வந்துள்ளனர்.
சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு தங்களது உடலை தானமாக கொடுப்பதற்கு முன்வந்து, அதற்கான உறுதிப் பத்திரங்களை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவிடம் செவ்வாய்க்கிழமை வழங்கினர்.
சங்கத் தலைவர் விக்ரமன், துணைத் தலைவர்கள் கே.எஸ்.ரவிக்குமார், பி.வாசு, பொதுச் செயலர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Click it and Unblock the Notifications











