கேளிக்கை வரிக்கு எதிர்ப்பு.. மதுரை உட்பட 6 மாவட்ட தியேட்டர் அதிபர்கள் அதிரடி முடிவு
கேளிக்கை வரியைத் திரும்பப் பெறாவிட்டால், தீபாவளி முதல் மதுரை உட்பட 6 மாவட்டங்களில் தியேட்டர்களை மூட திட்டமிட்டுள்ளனர்.
மதுரை: ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை அமலுக்கு வந்ததையடுத்து, மாநில அரசுகள் கேளிக்கை வரி கட்டணம் நிர்ணயித்துக் கொள்ளலாம் எனும் அறிவிப்பு வெளியானது. அதன்படி தமிழக அரசு திரைப்படங்களுக்கு 30% கேளிக்கை வரியை நிர்ணயித்தது.
இதை எதிர்த்து தமிழகம் முழுவதும் திரைப்படத் துறையினர், திரையரங்க ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதனால், தமிழக அரசு திரைத்துறையினரிடம் பேச்சு வார்த்தை நடத்தியது. அதனால், திரையரங்குகளில் டிக்கெட்டுகள் கேளிக்கை வரி சேர்க்கப்படாமல் ஜி.எஸ்.டி வரி மட்டும் பெறப்பட்டு வந்தது. இதுவே வழக்கத்தை விட 20 முதல் 40 ரூபாய் வரை மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் உயர்ந்திருந்தது.

கடந்த வாரம், 30% என்ற கேளிக்கை வரியை 10% ஆகக் குறைத்து வசூலிக்கப்படும் என்று அரசு அறிவித்தது. இந்த 10% கேளிக்கை வரி முன்தேதியிட்டு அமல்படுத்தப்படும் எனத் தெரிவித்திருந்தது. இதற்கு திரையுலகினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கேளிக்கை வரியை முழுமையாக ரத்து செய்யக்கோரி தியேட்டர் ஊழியர்கள் சிலர் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மதுரை உட்பட 6 மாவட்டங்களில் தீபாவளி முதல் தியேட்டர்களை மூட முடிவு செய்துள்ளனர். மதுரையில் நடந்த 6 மாவட்ட தியேட்டர் உரிமையாளர்கள் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கேளிக்கை வரி 10% என அறிவிக்கப்பட்டதை தமிழக அரசு திரும்பப் பெற வலியுறுத்தியுள்ளனர். மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் தீபாவளி முதல் தியேட்டர்களை மூடவும் தியேட்டர் உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











