பத்மாவதி படமும் திருச்சி தியேட்டரின் வசூல் கொள்ளையும்!
Recommended Video

இந்த வருடம் வெளியான இந்தியப் படங்களில் சர்வதேச சினிமா பார்வையாளர் கவனத்திற்குள்ளாகி பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டடித்த முதல் இந்திய படம் பத்மாவ(த்)தி.
பத்மாவதி ரீலீஸ் ஆவதற்கு அப்படத்தின் தயாரிப்பாளர் எதிர் கொண்ட அவமானம், எதிர்ப்புகள், சட்டப் போராட்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. பத்மாவதி படத்தை தமிழகம் முழுவதும் சத்யம் சினிமாஸ் வெளியிட்டது.

திருச்சியில் ஒரு தியேட்டரில் பத்மாவதி திரையிடப்பட்டது. தமிழ் படங்களுக்கு இணையாக இந்தப் படத்திற்கு விளம்பரம் இல்லை. ஆனால் தமிழ் படங்களைக் காட்டிலும் அதிகமான டிக்கட்டுகள் விற்பனையாகி தொடக்க காட்சி முதல் கல்லா கட்டியது பத்மாவதி.
எம்ஜி அல்லது அட்வான்ஸ் என்று தியேட்டர்காரர்களிடம் வாங்காமல் திரையிடப்பட்ட பத்மாவதி பட வசூலில் திருச்சி தியேட்டர் உரிமையாளர்கள் தனியாக கல்லா கட்டிய கொடுமை தமிழ் சினிமாவில் தனி ரகம்.

பத்மாவதி படம் பார்க்க வந்த ரசிகனுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தில் டிக்கட் விற்பனை செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. அதே போன்று வசூல் ஆன தொகையில் தமிழக அரசு ஆணைப்படி 8% கேளிக்கை வரி கழிக்காமல் 15% சதவீதம் பிடித்தம் செய்திருக்கிறார்கள். அது மட்டுமின்றி 3டி கண்ணாடி 30 ரூபாய் அதற்கு GST என 2 ரூபாய் வசூலித்திருக்கிறார்கள்.
தமிழ்நாடு முழுவதும் பத்மாவதி படத்திற்கு 3டி வசதி உள்ள தியேட்டர்களில் கண்ணாடிக்கான வாடகை கட்டணம் மட்டுமே பெற்றுக் கொண்டு காட்சி முடிந்ததும் கண்ணாடி திரும்ப பெற்றுக் கொள்ளப்பட்டது.

திருச்சியில் அந்த குறிப்பிட்ட தியேட்டரில் இதே நடைமுறைதான் என்றாலும் அடித்த வரை லாபம் என மோடியின் GST பார்முலாவை கண்ணாடிக்கும் தியேட்டர் நிர்வாகம் பயன்படுத்தியிருக்கிறது.
"கவுண்டரில் விற்கப்படும் டிக்கட் கட்டணத்திற்கு 18% சதவீத GST + 15 % கேளிக்கை வரி = 33% சதவீதம் கூடுதல் வசூல் செய்யும் தியேட்டர் நிர்வாக நடவடிக்கை அராஜகமானது என்றாலும் 'பத்மாவதி' படம் பார்ப்பதற்காக பொறுத்துக் கொண்டோம். எங்களிடம் வசூலித்த தொகைக்கான வரிகள் அரசுக்கு செலுத்தப்பட்டதா என்பதை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் உறுதிப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட உள்ளோம்," என்கிறார் திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த அரங்கநாதன்.
- நமது நிருபர்


Click it and Unblock the Notifications











