'பாலக்காட்டு மாதவன்... பேய்ப் பட சீஸனில் வரும் தாய் படம் இது!'
பாலக்காட்டு மாதவன் படம் 75 சதவீதம் காமெடி, 25 சதவீதம் சென்டிமென்டுடன் உருவாக்கப்பட்டுள்ளது என்று விவேக் தெரிவித்தார்.
விவேக் நாயகனாக நடித்து நாளை வெளி வரும் புதிய படம் பாலக்காட்டு மாதவன். குடும்ப பின்னணியில் முழுநீள நகைச்சுவை படமாக இது உருவாகியுள்ளது. இப்படத்தில் விவேக்குக்கு ஜோடியாக சோனியா அகர்வால் நடித்துள்ளார். மேலும், செம்மீன் ஷீலா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இது எப்படிப்பட்ட படம்? என்ன சொல்ல வருகிறது?

தாய் படம்
விவேக் கூறுகிறார்:
‘பாலக்காட்டு மாதவன்' ஒரு குடும்ப படம். இதுமாதிரி குடும்ப படம் வெளிவந்து ரொம்ப நாளாகி விட்டது. பேய் படம் வருகிற சீசனில் ஒரு தாய் படம் வந்திருக்கிறது. இதில் எனக்கு ஜோடியாக சோனியா அகர்வால் நடித்துள்ளார். இது முழுக்க முழுக்க குடும்ப பின்னணியில் அமைந்துள்ள ஒரு காமெடிப் படம்.

காமெடி, சென்டிமென்ட்
இந்த படத்தை 75 சதவீதம் காமெடி, 25 சதவீதம் சென்டிமெண்ட் கலந்து எடுத்துள்ளோம். இதில், 75 சதவீதம் காமெடியைவிட கடைசி 25 சதவீதம் வரும் செண்டிமெண்ட் காட்சிகளை மக்கள் வியந்து பார்ப்பார்கள்.

சீரியஸ் க்ளைமாக்ஸ்
ஒரு காமெடியன் படத்தில் ஒரு சீரியஸ் கிளைமாக்ஸ் வைத்துள்ளோம். அதை மக்களும் கண்டிப்பாக ரசிப்பார்கள்.
நகைச்சுவை நாயகன் ஹீரோவாக நடிக்கும்போது, அவனே எல்லாவற்றையும் தோளில் எடுத்துப் போட்டுக்கொள்வது மிகவும் தவறு. எல்லோருக்கும் சமமான வாய்ப்பு கொடுக்கவேண்டும். அந்த வகையில் இந்த படத்தில் சோனியா அகர்வாலுக்கும் நிறைய பங்கு இருக்கிறது. அதேபோல், செம்மீன் ஷீலா அவர்களுக்கும் நிறைய பங்கு இருக்கிறது.

ரசிக்கும்படி காமெடி
இதுதவிர, மனோபாலா, சிங்கமுத்து, பாண்டு, இமான் அண்ணாச்சி எல்லோருமே அவங்களுடைய கதாபாத்திரத்தை ரொம்பவும் அழகாக செய்திருக்கிறார்கள். அதனாலதான் இந்த படம் எல்லோரும் ரசிக்கும்படியாக அமைஞ்சிருக்கு.

பெற்றோர்களை கவனிங்க
பெற்றோர்களை எல்லோரும் நன்றாக கவனிக்க வேண்டும். நம்மை பெற்று, வளர்த்து ஆளாக்கி, வாழ்க்கையில் நம்மை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வரும் பெற்றோர்களை நமக்கு ஒரு நல்ல நிலைமை வரும்போது அவர்களை மறந்துவிடுகிறோம்.

அன்புதான்
வேலை நிமித்தமாக வெளிநாடு போகிறவர்கள், முதியோர் இல்லத்தில் அவர்களை விட்டு சென்றுவிடுகிறார்கள். பெற்றோர்கள் கடைசிக் காலத்தில் விரும்புவது பணத்தையோ, புகழையோ, வசதிகளையோ அல்ல. உங்களிடம் இருந்து கிடைக்கும் அன்பைத்தான். அந்த அன்புதான் முக்கியம். அன்பை மட்டும் பெற்றோர்களுக்கு கொடுத்தாலே போதும்.
இந்த படம் எல்லோருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்," என்றார்.


Click it and Unblock the Notifications











