'காப்பி அடிக்கிறது ஒண்ணும் பெரிய தப்பு மாதிரி எனக்குத் தோணலை - முருகதாஸுக்கு வந்த ஞானம்!
காப்பியடிக்கிறது ஒண்ணும் தப்பில்லைங்க.. மனசுல ஆழமா பதிஞ்ச நல்ல விஷயம்தான் வேறு காட்சியா வருது, என்று புது விளக்கம் தந்து அசத்தியுள்ளார் ஏ ஆர் முருகதாஸ்.
எங்கே எப்படி எதற்காக அப்படி முருகதாஸ் சொன்னார் என்பதைப் பார்க்கும் முன்... முருகதாஸின் காப்பிகள் சிலவற்றை பார்த்து விடலாமே!

காப்பி மன்னன்
முதல் படம் தீனா, லோக்கல் ரவுடியிசம் பற்றிய கதை. அது அமோகமாகப் போகாத கடுப்பிலோ என்னவோ, அடுத்து சர்வதேச லெவலுக்குப் போய்விட்டார் முருகதாஸ்.
ஆனால் ஒரு விஷயம்... ரொம்ப புத்திசாலித்தனமாக காப்பியடிப்பதில் கில்லாடி ஏ ஆர் முருகதாஸ். ரமணா தொடங்கி ஏழாம் அறிவுவரை அது தெளிவாகத் தெரிந்தது.

ரமணா
ரமணா படம் ஒரிஜினல் ஸ்க்ரிப்ட் போல என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் ஏற்கெனவே ஆங்கிலத்தில் வெளியான ஒரு படத்தை டெவலப் பண்ணிதான் இந்த ரமணாவை அவர் எடுத்திருந்தார். ஒரிஜினல் படத்தில் ஒரு பேராசிரியர் தன்னிடம் பயின்ற மாணவர்களை வைத்து தீவிரவாதத்தை உலகமெங்கும் விதைப்பார். இதில் அது ஊழலை ஒழிப்பதாக மாறியிருந்தது.

கஜினி
தமிழ், இந்தியில் வெளியாகி வசூலில் சாதனை படைத்த கஜினி, ஆங்கிலத்தில் வெளியான மெமண்டோவின் அப்பட்ட காப்பி என்பது தெரிந்திருக்கும். மெமண்டோ நாயகனைப் போலவே உடலெங்கும் சூர்யாவும் ஆமீர்கானும் பச்சைக் கொண்டது உள்பட டிசைன்களில் கூட பெரிய மாற்றமில்லாமல் வந்தது. ஆனால் முருகதாஸ் அந்த காட்சிகளைக் கோர்த்த விதம், அவரது காப்பியை மன்னிக்கச் செய்தது!

ஏழாம் அறிவு
இந்தப் படம் வெளியாகும் முன்பு வரை, 80 ஆண்டுகால தமிழ் சினிமாவில் தமிழனைப் பெருமைப்படுத்தும் ஒரே படம் இதுதான் என்று கூறிவந்தார்.
ஆனால் படம் வெளியான பிறகுதான் அது எத்தனை சீன, ஹாலிவுட் படங்களின் உல்டா என்பது தெரிய வந்தது. படம் ஓரளவுக்கு ஓடினாலும், முருகதாஸின் மதிப்பை டமாலென சின்னதாக்கிய பெருமை இந்தப் படத்துக்கே உண்டு.

துப்பாக்கியும் போஸ்டர் காப்பியும்...
இப்போது விஜய்யை வைத்து துப்பாக்கி எடுத்து வருகிறார் முருகதாஸ். இந்தப் படம் ஆரம்பத்திலிருந்தே ஏக சர்ச்சைகளில் அடிபட்டுவிட்டது. லேட்டஸ்டாக, படத்தின் போஸ்டரையே 80களில் வந்த ஆன் ஆபீசர் அன்ட் ஜென்டில்மேன் ஹாலிவுட் படத்திலிருந்து சுட்டிருக்கிறார் என்பதை ஒன்இந்தியா தமிழ் தான் முதலில் அம்பலமாக்கியது நினைவிருக்கலாம்.

காப்பி தப்பில்லே...
இந்த காப்பி குறித்து சமீபத்தில் ஹைதராபாதில் நடந்த பிரஸ் மீட் ஒன்றில் நிருபர்கள் கேள்வி எழுப்ப, அதற்கு முருகதாஸ் அளித்த கூல் பதில் இது:
"அந்த டிசைன் வந்து எத்தனை வருஷம் ஆச்சிங்கிறது முக்கியமில்லை.அதனோட பாதிப்பு என் மனசோட மூலையில எங்கேயோ தங்கியிருந்து இப்ப வெளிப்பட்டிருக்கு அவ்வளவுதான். இது மொத்த உலகமும் நடக்குற சமாச்சாரம் தான். மீடியா ஆளுங்க நீங்கதான் அதையெல்லாம் ஊதிப்பெருசாக்குறீங்க..!'
ஆஹா... என்ன அற்புதமான விளக்கம்.. ஒரு பய நம்ம அடிச்சிக்க முடியாது!


Click it and Unblock the Notifications











