“அறிவு, சந்தோஷ் நாராயணன் பிரச்சினைக்கு ஏ.ஆர். ரஹ்மான் தான் காரணமா?: என்ன சொல்கிறார் பா. ரஞ்சித்?
சென்னை: 'விக்டிம்' என்ற ஆந்தாலஜி படத்தில் பா. ரஞ்சித் 'தம்மம்' என்ற ஒரு கதையை இயக்கியுள்ளார்.
நேரடியாக சோனி ஓடிடியில் வெளியான 'விக்டிம்' படத்தில், ரஞ்சித் இயக்கிய 'தம்மம்' கதைக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன.
இந்நிலையில், அறிவு, சந்தோஷ் நாராயணன் இருவருக்கும் இடையேயான பிரச்சினையில், மூன்றாவதாக ஒருவர் இருப்பதாக ரஞ்சித் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுமையான முயற்சியில் விக்டிம்
சோனி ஓடிடியில் நேரடியாக வெளியாகியுள்ள 'விக்டிம்' நான்கு தனித்தனி கதைகளுடன் ஆந்தாலஜி படமாக உருவாகியுள்ளது. பா.ரஞ்சித், வெங்கட் பிரபு, சிம்பு தேவன், ராஜேஷ். எம் ஆகியோர், 4 கதைகளை குறும்படங்களாக இயக்கியுள்ளனர். இதில், 'தம்மம்' என்ற கதையை, பா. ரஞ்சித் இயக்கியுள்ளார். 'கொட்டைபாக்கு வத்தலும், மொட்டை மாடி சித்தரும்' என்ற கதையை சிம்புதேவனும், 'மிரேஜ்' கதையை எம். ராஜேஷும், 'கன்ஃபெஷன்' கதையை' வெங்கட் பிரபுவும் இயக்கியுள்ளனர்.

வரவேற்பை பெற்ற தம்மம்
இந்த நான்கு கதைகளில், ரஞ்சித் இயக்கியுள்ள 'தம்மம்' படத்திற்கு, நல்ல விமர்சனங்கள் கிடைத்துள்ளது. பண்ணையாரின் ஆதிக்க மனநிலையால் விவசாயி ஒருவர் எப்படி பாதிக்கப்படுகிறார் என்பதை, மிக நேர்த்தியாக இயக்கியுள்ளார். எப்போதும் போல ரஞ்சித்தின் அரசியல் வசனங்களும், அதன் காட்சியமைப்புகளும், ரசிகர்களை கவர்ந்துள்ளது.

எதையும் வெளிப்படையாக பேசும் ரஞ்சித்
இந்நிலையில், 'விக்டிம்' படம் உருவானது குறித்து இயக்குநர்கள் வெங்கட் பிரபு, சிம்புதேவன் ஆகியோருடன் ரஞ்சித்தும் சேர்ந்து தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்திருந்தார். பா. ரஞ்சித் இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் உதவியாளராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது தனது திரை அனுபவங்கள் குறித்து பேசிய ரஞ்சித், "வெங்கட் பிரபு இல்லையென்றால், நான் சினிமாவில் இவ்வளவு ஈஸியாக வந்திருக்க முடியாது. அவர் செய்த உதவியால் தான் அட்டகத்தி படத்தை வெளியிட முடிந்தது" எனக் கூறினார்.

சிஷ்யனை பாராட்டிய குரு
அதே நிகழ்ச்சியில், பா. ரஞ்சித் குறித்து இயக்குநர் வெங்கட் பிரபுவும் மனம் திறந்தார். அதில், "ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் படத்தை பார்த்துவிட்டு அழுதுட்டேன், என்னோட அசிஸ்டெண்ட் இப்படி ஒரு படம் எடுத்தானா என என்னாலே நம்பமுடியவில்லை" எனக் கூறினார். மேலும், "அடுத்தடுத்து கபாலி, காலா என சூப்பர் ஸ்டாரை வைத்து ரஞ்சித் படம் இயக்கியது, எங்களுக்கெல்லாம் கிடைக்காத பாக்கியம்" எனவும் வெங்கட் பிரபு மிகவும் உருக்கமாக பேசினார்.

அறிவு சந்தோஷ் நாராயாணன் பிரச்சினை
அதே நிகழ்ச்சியில், அறிவு - சந்தோஷ் நாராயாணன் இடையேயான பிரச்சினை குறித்து ரஞ்சித்திடம் கேட்கப்பட்டது. முன்னதாக 'என்ஜாயி எஞ்சாமி' பாடல் சர்ச்சையில், தொடர்ந்து அறிவுக்கு ஆதரவாக ரஞ்சித் தனது கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். மேலும், சந்தோஷ் நாராயணனுடன் மட்டுமே பணிபுரிந்து வந்த ரஞ்சித், இப்போது அந்த கூட்டணியையும் முறித்துவிட்டார். இதனால் ரஞ்சித் என்ன பதில் சொல்லப் போகிறார் என, ரொம்பவே ஆர்வம் எழுந்தது.

ஏ.ஆர். ரஹ்மான் தான் காரணமா?
அறிவு எழுதி சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்த 'என்ஜாயி எஞ்சாமி' பாடலை, ஏ.ஆர். ரஹ்மானின் 'மாஜ்ஜா' நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. புதியவர்களுக்கும் திறமையானவர்களுக்கும் வாய்ப்புகள் கொடுப்பதற்காக ஏ.ஆர். ரஹ்மானால் தொடங்கப்பட்டது தான் இந்த மாஜ்ஜா நிறுவனம். இந்நிலையில், "அறிவு, சந்தோஷ் நாராயணன் பிரச்சினையின் நடுவே இருப்பது ஏ.ஆர். ரஹ்மானின் மாஜ்ஜா நிறுவனம் தான் என்றும், அவர்களை நடுவில் வைத்து பேசினால் தான், இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் எனவும்" ரஞ்சித் கூறியுள்ளது, ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











