நமது கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் காவியத்தலைவன்: ஏ.ஆர்.ரகுமான்
காவியத்தலைவன் திரைப்படம் நமது கலாச்சாரத்தினை பிரதிபலிக்கும் திரைப்படம். இதை உலகத்தின் சிறந்த இயக்குநர்களுக்கு போட்டுக்காட்டுவேன் என்று இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் கூறியுள்ளார்.
சித்தார்த்-வேதிகா நடிப்பில் காவிய படமாக உருவாகியுள்ள புதிய படம் 'காவியத்தலைவன்'. இப்படத்தை வசந்தபாலன் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் ஆடியோ வெளியீடு விழா திங்கட்கிழமையன்று சூரியன் எஃப்.எம்.ரேடியோ நிலையத்தில் நடைபெற்றது. முதல்முறையாக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதையடுத்து, பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தனர் படக்குழுவினர்.
இந்த பத்திரிகையாளர் சந்திப்பில், நடிகர் சித்தார்த், நடிகைகள் வேதிகா, அனைகா, இயக்குனர் வசந்தபாலன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், எழுத்தாளர் ஜெயமோகன், பாடலாசிரியர் பா.விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

நாடக வாழ்க்கை
இவ்விழாவில் பேசிய வசந்தபாலன், ‘அங்காடித்தெரு' படம் முடிந்தபிறகு நானும் ஜெயமோகனும் நாடக வாழ்க்கை பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அப்போது, அவ்வை சண்முகி எழுதிய நாடக வாழ்க்கை என்ற புத்தகத்தை பற்றி ஜெயமோகன் என்னிடம் விளக்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது சாதாரணமாக கேட்டுக் கொண்டிருந்த நான், அதன்பிறகு அதன்மீது ஈடுபாடு ஏற்பட்டு, அப்புத்தகத்தை தேடிக் கண்டுபிடித்து படிக்க ஆரம்பித்தேன். அதுதான், இந்த படம் எடுக்க எனக்கு உந்துதலாக இருந்தது என்றார்.

மூன்று தலைமுறைகளுக்கு இசை
ஏ.ஆர்.ரகுமான் பேசும்போது, நான் இதுவரை 3 தலைமுறைகளுக்கு இசையமைத்திருக்கிறேன். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஈரானிய இயக்குனர் மஸித் மஸித்திடம் அமர்ந்து பேசும் வாய்ப்பு கிடைத்தது.
அப்போது, அவர் என்னிடம், நான் உங்களுடைய படங்கள் எல்லாம் பார்த்து வருகிறேன். ஏன் உங்கள் கலாச்சாரத்தை விட்டுவிட்டு, வெஸ்டர்ன் கலாச்சாரத்தையே பின்பற்றி வருகிறீர்கள் என்றார். அவருக்கு நான் இந்த படத்தை போட்டுக் காண்பிப்பேன். அவருக்கு இந்த படம் கண்டிப்பாக பிடிக்கும் என்றார்.

நூற்றாண்டுகளுக்கு முந்தைய கதை
காவியத்தலைவன் திரைப்படமானது சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் தழைத்தோங்கிய நாடக கலையின் நாயகர்களை குறித்து பேசும் படைப்பாகும்.

நாடக நடிகர்களுக்கு நிதி உதவி
இந்த நேரலை நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட நடிகர் சித்தார்த் பாரம்பரிய கலாசார உடையில் வந்திருந்தார். இவ்விழாவில், மேடை நாடக கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கி அவர்களை கௌரவித்தனர்.

வாங்க மக்கா வாங்க
படத்தின் இசை, ரகுமானுக்கு பாரம்பரிய இசை மீதான காதலை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. வாங்க மக்கா வாங்க எங்க நாடகம் பார்க்க வாங்க... என்ற பாடலில் அசத்தியுள்ளார் ரகுமான் அதிரடி சாம்ராஜ்யம்தான். இசை அதிர அதிர சும்மா...கேட்பவர்களை எல்லாம் நிச்சயம் தாளம் போட வைக்கும்.

யாருமில்லா தனியரங்கில்...
யாருமில்லா தனியரங்கில் ஒரு குரல் போலே,
நீ எனக்குள்ளே எங்கோ இருந்து நீ
என்னை இசைக்கிறாய் இப்படிக்கு உன் இதயம்
என்ன சொல்வேன் இதயத்திடம் உன்னை தனிமும் தேடும்
என் பேச்சை கேடக்காமல் உன்னை தேடும்
யாருமில்லா தனியரங்கில்... என மென்மையாய் வருடுகிறது இசையும் பாடலும். அதோடு பழைய காலத்திற்கு அப்படியே நம்மை அழைத்துச் செல்கிறது.

உலகமே யுத்தம் எதற்கு?
உலகமே யுத்தம் எதற்கு... என்ற கர்ணமோட்சம் பற்றிய பாடல் சில நொடிகள்தான் ஒலிக்கிறது எனினும் மனதையும், சிந்தனையையும் மகாபாரதப் போர்களத்திற்கு அழைத்துச் செல்கிறது.

புதிய சகாப்தம் படைக்கும்
இந்தப் படத்தில் நிறைய பாடல்கள் என்கின்றனர். ஒரு பானை சோற்றுக்கு ஒருசோறு பதம் என்பார்கள். ஆனால் கேட்ட மூன்று பாடல்களுமே சூப்பர் என்கின்றனர் இசை ரசிகர்கள். ரகுமானின் இசையும் பாடலும் மட்டுமல்ல இந்தப் படத்தின் மூலம் தமிழ் திரை உலகத்தை உலக அரங்கில் தலைநிமிரச் செய்வார் வசந்தபாலன் என்பதில் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications











