இசைப்புயல் ரஹ்மான் ஸ்பெஷல்... இந்தப் பாடல்களை மறக்கத்தான் முடியுமா?
ஏ ஆர் ரஹ்மான் இசையில் ஒரு புதிய படத்தின் பாடல்கள் வெளியாகும்போது அவ்வளவாகப் பிடிக்காது. குறிப்பாக இளையராஜாவின் இசையைக் கேட்டு வளர்ந்து வந்தவர்களுக்கு சுத்தமாகப் பிடிக்காது.
ஆனால் போகப் போக அவர்களும் தானாகவே அந்தப் பாடல்களை முணுமுணுக்க ஆரம்பித்துவிடுவார்கள். அது ரஹ்மான் மேஜிக்!
இன்னொன்று... ஏ ஆர் ரஹ்மான் இசையில் தொன்னூறுகளில் வந்த பல சூப்பர் ஹிட் பாடல்களை இன்று கேட்டாலும் அலுக்காதவை.
ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமாகி 23 ஆண்டுகள் கடந்துவிட்டன. நூற்றுச் சொச்சம் படங்கள்தான் செய்திருக்கிறார். இவற்றில் தமிழ்ப் படங்கள் பாதிதான் இருக்கும். மற்றவரை பிற மொழிப் படங்கள்.
இந்த 23 ஆண்டுகளில் நம் காதுகளுடன் பயணிக்கும் அவரது அருமையான பத்துப் பாடல்களின் தொகுப்பு இது.

1. கண்ணாளனே... (பம்பாய்)
மணிரத்னம் இயக்கிய பம்பாய் படத்தில் கிறங்கடித்த பாடல் இது. சித்ராவின் மயக்கும் குரலும் ரஹ்மானின் இதயம் தொடும் இசையும் இப்போது கேட்டாலும் தேனாய் இனிக்கும்.

2.மெல்லிசையே (மிஸ்டர் ரோமியோ)
பிரபு தேவா நடித்த இந்தப் படம் சரியாகப் போகாவிட்டாலும், அத்தனை பாடல்களும் ஹிட். அதிலும் இந்த மெல்லிசையே.. பாடல் கேட்கும்போதெல்லாம் தனி கிக்.

3. தனியே தன்னந்தனியே... (ரிதம்)
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல் இந்த ரிதம் பாட்டு.
மீண்டும் வருவாள்
நம்பினேன்
அதோ அவள் வரும் வழி தெரியுது... என்ற வரிகள்... அதற்கு ஆர்ப்பாட்டமில்லாத ரஹ்மானின் இசை... காதலர்களின் பாட்டு இது!

4. சய்யா சய்யா (உயிரே)
அத்தனை உற்சாகமான ஆரம்பத்தை ரஹ்மானின் வேறு எந்தப் பாடல்களிலும் பார்க்க முடியாது. அபாரமான கற்பனை வளம் கொண்ட பாடல். பாடகர் தமிழைக் கொலை செய்திருந்தாலும், ரஹ்மான் பாய்க்காக மன்னிக்கலாம் எனும் அளவுக்கு மனசைச் சுண்டி இழுத்த பாட்டு இது.

5. கிக்கு ஏறுதே (படையப்பா)
படம் வெளியாகி 17 ஆண்டுகள் ஆன பிறகும், ரசிகர்களைக் கட்டிப் போடும் சுறு சுறு பாட்டு இது. பாடலின் ஆரம்பத்தைக் கேட்கும்போதே உதடுகள் தானாக விசிலடிக்க ஆரம்பித்துவிடும்.

6. சினேகிதனே (அலைபாயுதே)
சாதனா சர்க்கம் என்ற சொர்க்கக் குரலில், ரஹ்மானின் அபார இசைக் கற்பனையில் உருவான இந்தப் பாடல் ரஹ்மானை இன்னும் ஒரு நூறாண்டு கடந்த பிறகும் முணுமுணுக்க வைக்கும். க்ளாஸிக்!

7. முன்பே வா என் அன்பே வா (சில்லுன்னு ஒரு காதல்)
படம் பார்க்க வேண்டாம்... காட்சிகள் தெரிய வேண்டாம்.... ஜஸ்ட் இந்தப் பாடலைக் கேளுங்கள்.. கல்லூரி நாள் காதல் காலங்கள் மனதில் நிழலாடி உணர்வுகளைத் தளும்ப வைக்கும்.

8. என்ன சொல்லப் போகிறாய் (கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்)
சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தால் நியாயமா... என்ற அலங்கார வார்த்தைகளுடன் ஆரம்பிக்கும் இந்தப் பாடலின் இசை நம்மை புது உலகத்துக்கு அழைத்துப் போய்விடும்.

9. அதிரடிக்காரன் (சிவாஜி)
ரஜினி - ரஹ்மான் காம்பினேஷனின் உச்சம் இந்தப் பாட்டு என்றால் மிகையல்ல. அந்த இசை, வாலியின் இளமை துள்ளும் வரிகள்... அந்தப் பாட்டை எவர்கிரீனாக்கிவிட்டன.

10. இரும்பிலே ஒரு இதயம்.. (எந்திரன்)
ரஹ்மான் குரலில் எத்தனைப் பாடல்கள் வந்திருந்தாலும், இரும்பிலே ஒரு இதயம்.. பாட்டு மட்டும் ஸ்பெஷல். எந்திரனின் மந்திரப் பாட்டு இது.


Click it and Unblock the Notifications











