ரியோ ஒலிம்பிக் நல்லெண்ணத் தூதுவராக சல்மான் ஏன் இருக்கக் கூடாது? - ஏ.ஆர். ரகுமான்
மும்பை: ரியோ ஒலிம்பிக் நல்லெண்ணத் தூதுவராக சல்மான் கான் ஏன் இருக்கக் கூடாது? என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
பிரேசிலின் கால்பந்து ஜாம்பவான் பீலேவின் சுயசரிதை திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். கடந்த வாரம் இந்தியா தவிர்த்து மற்ற நாடுகளில் இப்படம் வெளியாகியுள்ளது.
இந்த வாரம் இந்தியாவில் வெளியாகும் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் ஏ.ஆர்.ரகுமான் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

பீலே: பர்த் ஆப் லெஜென்ட்
பிரேசிலின் கால்பந்து ஜாம்பவான் பீலேவின் சுயசரிதை 'பீலே: பர்த் ஆப் லெஜென்ட்' என்னும் திரைப்படமாக உருவாகியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற பீலே டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இப்படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கலந்து கொண்டார்.

ரியோ ஒலிம்பிக்
விழாவில் ரியோ ஒலிம்பிக் தூதுவர் குறித்த கேள்விக்கு ''என்னை யாரும் இதுகுறித்து தொடர்பு கொள்ளவில்லை. ஒருவேளை என்னுடைய நிர்வாகத்திற்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் எனக்கு இதுகுறித்து எதுவும் தெரியாது'' என்று ஏ.ஆர்.ரகுமான் கூறினார். முன்னதாக ரியோ ஒலிம்பிக் நல்லெண்ணத் தூதுவர் பதவிக்கு ஏ.ஆர்.ரகுமான், சச்சின் டெண்டுல்கர், அபினவ் பிந்த்ரா ஆகியோரை இந்திய ஒலிம்பிக் சங்கம் அணுகியதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

சல்மான் கான்
நடிகர் சல்மான் கான் ரியோ ஒலிம்பிக் நல்லெண்ணத் தூதுவராக நியமிக்கப்பட்டிருப்பது குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ''சல்மான் கான் பிரபலமான ஒருவராகத் திகழ்கிறார். பிறகு ஏன் அவரை நியமிக்கக் கூடாது? என்று பதில் கேள்வியை எழுப்பினார். கடைசியாக நடிகருக்குப் பதிலாக ஒரு விளையாட்டு வீரரை தேர்வு செய்திருந்தால் நன்றாக இருக்குமே? என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு ''உண்மையிலேயே .இது ஒரு நல்ல கேள்வி தான்.ஆனால் இந்தக் கேள்வியை நீங்கள் ஒலிம்பிக் நிர்வாகத்திடம் தான் கேட்க வேண்டும்'' இவ்வாறு ரகுமான் கூறியிருக்கிறார்.

எதிர்ப்பு
சல்மான் கான் ரியோ ஒலிம்பிக் நல்லெண்ணத் தூதுவராக நியமிக்கப்பட்டதற்கு கவுதம் கம்பீர்(கிரிக்கெட் வீரர்), மில்கா சிங்(தடகள வீரர்), யோகேஷ்வரர் (மல்யுத்த வீரர்) ஆகியோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். இதுகுறித்து செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் ''விளையாட்டுத்துறை சார்ந்த பிரச்னைகள் கவனத்தில் கொள்ளப்பட்டால் இதுபோன்ற விளையாட்டுத்துறைக்குத் தொடர்பில்லாதவரை நியமிப்பதில் பிரச்னைகள் கிடையாது. விளையாட்டில் எல்லோரும் பங்களிக்கவேண்டும் என்பதே நம் தேவை'' என்று கூறியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











