கனா கண்டேன் முதல் சலார் வரை..பிரித்விராஜின் வில்லன் நடிப்பை பார்த்து பிரமித்து பாராட்டிய ரஜினிகாந்த்
திருவனந்தபுரம்: மலையாள திரையுலகின் மிக முக்கியமான நடிகராக வலம் வரும் பிருத்விராஜ்ஜின் 40வது பிறந்தநாள் இன்று.
நடிகராக தனது சினிமா பயணத்தை தொடங்கிய பிருத்விராஜ், இன்று இயக்குநராகவும் மாஸ் காட்டியுள்ளார்.
இன்று 40வது பிறந்தநாள் கொண்டாடும் பிருத்விராஜ்க்கு சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சலார் படத்தில் பிருத்விராஜ்
2002ல் இளம் நடிகராக அறிமுகமான பிருத்விராஜ், இன்று மலையாள சினிமாவின் கோல்டன் ஸ்டாராக அசத்தி வருகிறார். சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து வந்த பிருத்விராஜின் இன்றைய உயரம் அவ்வளவு லேசானது கிடையாது. இதோ இன்று அவரின் 40வது பிறந்தநாளை முன்னிட்டு சலார் படக்குழு தாறுமாறான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் சலார் திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. அதில், வரதராஜ மன்னார் என்ற கேரக்டரில் நடிக்கும் பிருத்விராஜின் மிரட்டலான போஸ்டரை வெளி்யாகி வைரலாகி வருகிறது. பான் இந்தியா படமாக உருவாகும் சலார், பிருத்விராஜ் கேரியரில் மிக முக்கியமான படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினியின் பாராட்டு
மலையாளத்தில் ரஞ்சித் இயக்கத்தில் வெளியான ;நந்தனம்' படத்தில் ஹீரோவாக அறிமுகமான பிருத்விராஜ் 'ஸ்வப்னக்கூடு' என்ற திரைப்படத்தின் மூலம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். தமிழ் ரசிகர்களுக்கு இவர் அறிமுகமானது என்னவோ 2005ல் வெளியான 'கனா கண்டேன்' படத்தின் வழியாக தான். மறைந்த இயக்குநர் கேவி ஆனந்தின் முதல் படமான 'கனா கண்டேன்' ஸ்ரீகாந்த், கோபிகா நடிப்பில் வெளியானது. இதில், மதன் என்ற வில்லன் கேரக்டரில் செம்ம ஸ்டைலிஷாக கெத்து காட்டிருப்பார் பிருத்விராஜ். கோபிகாவின் நண்பனாக அறிமுகமாகி, வில்லனாக அவர் மாறும் காட்சிகள் சிலிர்க்க வைக்கும். இந்த கேரக்டரை பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினி, பிருத்விராஜை போனில் அழைத்து ரொம்பவே பாராட்டியுள்ளார்.

காதல் மன்னன்
பிருத்விராஜ் மலையாள திரையுலகின் காதல் மன்னன் எனலாம். அதாவது, அட்டாகசமான காதல் திரைப்படங்களில் தனது நடிப்பால், ரசிகர்களை உருக வைத்துள்ளார். 'என்னு நிண்டே மொய்தீன்', 'அனார்கலி போன்ற படங்கள் பிருத்விராஜின் கேரியரில் கொண்டாடப்பட வேண்டிய படங்கள். அதேபோல், செல்லுலாய்ட், விமானம், அய்யப்பனும் கோஷியும், டிரைவிங் லைசென்ஸ், குருதி, ஜன கண மன, தீர்ப்பு ஆகிய படங்கள் பிருத்விராஜ்க்கு திரைப்படங்கள் மீதான காதலை வெளிப்படுத்தின. மற்ற நடிகர்களின் சாயல் இல்லாமல் தனக்கான புதிய உடல்மொழி, பார்வை, டயலாக் டெலிவரி என அடுத்தடுத்து பல பரிமாணங்களை காட்டுவதில் பிருத்விராஜ் அல்டிமேட் ரகம்.

இயக்குநராகவும் கலக்கல்
சிறந்த நடிகராக மாஸ் காட்டிய பிருத்விராஜ், இயக்குநராகவும் தரமான சம்பத்தை செய்து காட்டினார். மோகன்லாலின் தீவிர ரசிகராக சினிமாவில் அறிமுகமான பிருத்விராஜ், பின்னாளில் அவரை வைத்தே தனது முதல் படத்தை இயக்குவார் என யாரும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். மோகன் லால் நடிப்பில் 'லூசிபர்' படத்தை இயக்கிய பிருத்விராஜ், அதை சூப்பர் ஹிட் படமாக்கியதோடு, பாக்ஸ் ஆபிஸிலும் 200 கோடி வசூல் செய்ய வைத்து கெத்து காட்டினார். இதோ இப்போது சலார் படத்திலும் வில்லனாக மிரட்ட காத்திருக்கிறார். தமிழில் கனா கண்டேன், மொழி, சத்தம் போடாதே, ராவணன் என தேர்ந்தெடுத்த கதைகளில் நடித்து தன்னை மெருகேற்றிக் கொண்டார். புதுமையான முயற்சிகள் வித்தியாசமான கதைக்களம் என சிறகடித்து வரும் பிருத்விராஜ், இன்னும் உயர பறக்க ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











