ஆமிர்கானின் டங்கல்... முதல் நாள் வசூலில் கபாலி, பாகுபலியை மிஞ்ச முடியவில்லை!
ஆமிர் கானின் டங்கல் படம் வெளியான முதல் நாளில் இந்தியாவில் ரூ 29.4கோடியை வசூலித்து அதிக வசூல் செய்த இந்திப் படங்களில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
மல்யுத்த விளையாட்டை மையமாக வைத்து நிதீஷ் திவாரி இயக்கத்தில் ஆமிர்கான் நடித்த படம் டங்கல். பெரிய நட்சத்திர நடிகர்கள் இல்லை. ஆனால் ஒரு நிஜக் கதையை பொருத்தமான நடிகர்களை வைத்து பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட படம் டங்கல். டங்கல் என்றால் இந்தியில் மல்யுத்தம் என்று பொருள்.

ஹரியானாவின் ஒரு குக்கிராமத்தில் நடக்கும் இந்தக் கதை, நிஜமாக நடந்த கதை. மகாவீர் சிங் போகட் என்ற மல்யுத்த வீரர், தன் வாழ்க்கையில் நிறைவேறாமல் போன தங்கப் பதக்க கனவை, தனது இரு பெண்களையும் மல்யுத்த வீராங்கனைகளாக்கி நிறைவேற்றிய கதை. கீதா, பபிதா என்ற அந்த இரு வீராங்கனைகளும் இன்னும் இந்தியாவுக்காக மல்யுத்தப் போட்டிகளில் பங்கெடுத்து வருகிறார்கள்.
எனவே இந்தப் படம் நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
நேற்று இந்தப் படம் உலகம் முழுவதும் வெளியானது. விமர்சகர்கள் வெகுவாகப் பாராட்டியுள்ளனர். வசூலிலும் குறைவில்லை. இந்திய அளவில் 29.4 கோடியைக் குவித்துள்ளது, முதல் நாளில் மட்டும். இந்திப் படங்களில் அதிக வசூல் செய்த இரண்டாவது படம் இதுதான். முதல் படம் சல்மான் கான் நடித்த சுல்தான். இந்தப் படம் ரூ 36 கோடிகளை வசூலித்திருந்தது.
ஆனால் இந்திய அளவில் அதிக வசூல் சாதனை செய்த படம் என்ற பெருமை இரு மாநில மொழிப் படங்களுக்குத்தான் உள்ளது.
ஒன்று ரஜினியின் கபாலி. இந்தப் படம் முதல் நாளில் மட்டும் இந்தியா முழுவதும் ரூ 58 கோடிகளைக் குவித்தது. அதற்கு அடுத்து நிற்பது பாகுபலி. வசூல் ரூ 52 கோடி.


Click it and Unblock the Notifications











