ஆமீர்கான் எங்களுக்கு வேண்டவே வேண்டாம் தெறித்து ஓடும் 'ஸ்நாப்டீல்'
டெல்லி: சகிப்புத்தன்மை விவகாரம் காரணமாக நடிகர் ஆமீர்கானுடன் போட்ட ஒப்பந்தத்தை ஸ்நாப்டீல் நிறுவனம் புதுப்பிக்க விரும்பவில்லை என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்தியாவின் முன்னணி ஆன்லைன் நிறுவனங்களில் ஒன்றான 'ஸ்நாப்டீல்' நிறுவனத்திற்கு நடிகர் ஆமீர்கான் விளம்பரத் தூதுவராக செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் வரும் மாதத்துடன் ஸ்நாப்டீல் நிறுவனத்துடனான அவரது ஒப்பந்தம் முடிவிற்கு வரவிருக்கிறது. இதைத் தொடர்ந்து ஆமீர்கானின் ஒப்பந்தத்தை மீண்டும் புதுப்பிக்க வேண்டாம் என்ற முடிவிற்கு அந்த நிறுவனம் வந்திருப்பதாக தெரிகிறது.

ஆமிர்கான்
பாலிவுட் சூப்பர்ஸ்டார்களில் ஒருவரான ஆமீர்கான் பல முன்னணி நிறுவனங்களுக்கு விளம்பரத் தூதுவராக செயல்பட்டு வருகிறார். இந்தியளவில் ஆமீர்கான் புகழுடன் திகழுவதால் பல நிறுவனங்களும் அவரைப் போட்டி போட்டு ஒப்பந்தம் செய்து வந்தன. இந்த நிலையில் சகிப்புத்தன்மை குறித்து அவர் தெரிவித்த கருத்துக்கள் அவருக்கு எதிராக தற்போது மாறி வருகின்றன.

சகிப்புத்தன்மை
இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்து விட்டதால் என் மனைவி வேறு நாட்டுக்குப் போய்விடலாம் என்று சொன்னதாக நடிகர் ஆமீர்கான் கடந்த நவம்பர் மாதத்தில் தெரிவித்தார்.இது நாட்டில் மிகப்பெரிய சர்ச்சைகளை உண்டு பண்ணியது. மேலும் இதன் காரணமாக தனது படப்பிடிப்புகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன் ஆமீர்கான் செல்லும் நிலை ஏற்பட்டது.

சரிந்த ஸ்நாப்டீல்
ஆமீரின் இந்தப் பேச்சால் அவரை விளம்பரத் தூதுவராக ஒப்பந்தம் செய்திருந்த ஸ்நாப்டீல் நிறுவனத்திற்கு மிகப்பெரிய சரிவு ஏற்பட்டது. மேலும் இதனால் கடுமையான நஷ்டங்களையும் அந்த நிறுவனம் சந்திக்கத் துவங்கியது.

ஆமீர்கான் புகைப்படம்
இந்நிலையில் சமீபகாலமாக தங்களது நிறுவன பொருட்களில் ஆமீர்கான் புகைப்படத்தை அந்நிறுவனம் அகற்றி வந்தது. மேலும் வருகின்ற மாதத்துடன் ஆமீர்கானுடனான ஸ்நாப்டீல் நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிவுக்கு வருகிறது. இதனைத் தொடர்ந்து மீண்டும் ஆமீர்கானின் ஒப்பந்தத்தை அந்நிறுவனம் புதுப்பிக்க விரும்பவில்லை என்று நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

வியத்தகு தூதர்
இதே போல மத்திய சுற்றுலாத் துறையின் வியத்தகு இந்தியா பிரசார விளம்பர தூதராக செயல்பட்ட ஆமீரின் ஒப்பந்தம் கடந்த மாதத்துடன் முடிவுக்கு வந்தது. ஆனால் ஆமீரின் இந்த பேச்சு காரணமாக அவரைக் கழற்றி விட்டு அமிதாப் பச்சன், பிரியங்கா சோப்ரா ஆகியோரை சுற்றுலாத்துறை தூதுவர்களாக மத்திய அரசு நியமித்தது குறிப்பிடத்தக்கது.
இன்னும் எத்தனை நிறுவனங்கள் இதுபோல ஆமீர்கானை கழற்றி விடப் போகின்றன என்பது தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











