எங்கே அந்த ரூ 1000 கோடி? - அம்பலத்துக்கு வந்த ஆஸ்கர் ரவிச்சந்திரனின் பொய்கள்!
ஷங்கர் இயக்கிய ஐ படம் ரிலீசாகவிருந்த நேரம்... தனித்தனியாக சில செய்தியாளர்களை அழைத்த ஆஸ்கர் ரவிச்சந்திரன் அவர்களிடம் அடித்துவிட்ட சமாச்சாரங்களைக் கேட்டு, படித்து தலை கிறுகிறுத்துப் போயிருக்கும் பலருக்கும்.

தியேட்டர்களை பாக்கெட்டிலை வைத்திருக்கிறார்?
படத்தை 7000 அரங்குகளில் வெளியிடுகிறேன் என்றார் முதல் கட்டமாக போன செய்தியாளர்களிடம். அடுத்த செட் செய்தியாளர்களுடன் இன்னொரு நாள் சந்திப்பு. அப்போது 7000 அரங்குகள், 15000 ஆயின. இதெல்லாம் சாத்தியமா என்று கூட ஒருவரும் கேட்கவில்லை. அவர் சொன்னதை அப்படியே வெளியிட்டார்கள். இந்த பதினைந்தாயிரம் அரங்குகளில், சீனாவில் மட்டுமே 7000 அரங்குகளில் படத்தை வெளியிடுவேன் என்றார்.

அந்த 20000 தியேட்டர்கள் எங்கே?
அப்படியும் அவருக்குத் திருப்தியில்லை.. மூன்றாவது செட் செய்தியாளர்களிடம், மொத்தம் 20000 அரங்குகளில் படத்தை வெளியிடப் போகிறேன். அமெரிக்கா கனடாவில் மட்டுமே 4500 அரங்குகளில் வெளியிடுவேன் என்றார்.

ரூ 1000 கோடி வசூலாகிடுச்சா?
அடுத்த முறை சிலரைச் சந்தித்த போது, ஐ வசூல் இந்திய சினிமாவில் புது சாதனைப் படைக்கும். குறைந்தது ரூ 1000 கோடி ரூபாயை வசூலித்துக் காட்டும் என்றார். எப்படிங்க சாத்தியம்? என்றபோது, அதான் இருபதாயிரம் அரங்குகளில் போடுகிறேனே, என்றார்.

இல்லாத தியேட்டர்களில், ஓடாத ஐ!
படம் வெளியானது. விமர்சனங்கள் வெளுத்தெடுத்தன. ஆனாலும் அசராத ஆஸ்கர், சென்னையிலிருக்கும் மொத்த அரங்குகளிலும் ஐ தான் ஓடிக் கொண்டிருக்கிறது என்ற பிரமையை ஏற்படுத்தும்படி, தினசரி விளம்பரம் செய்தார். ஓடாத தியேட்டர்கள் பெயர்களையெல்லாம் 50வது நாள் வரை தொடர்ந்து விளம்பரங்களில் இடம்பெற வைத்தார்.

அதுக்கும் மேல...?
ஐ வசூல் எப்படி? என்று கேள்வி எழுப்பி... 'அமோகம்.. அதுக்கும் மேல' என்று போஸ்டர்கள் அடித்தார்.

இப்ப என்னா செய்வீ்ங்க?
அதே ஐ படத்துக்கு வாங்கிய 83 கோடி கடனைக் கட்டவில்லை என்று குற்றம்சாட்டி, அரசுத் துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஆஸ்கர் ரவிச்சந்திரன் சொத்துகளை இன்று பறிமுதல் செய்திருக்கிறது.
இந்த ஐ படத்தின் பட்ஜெட் 180 கோடி என ஆஸ்கர் ரவி புளுகியதும் வெட்டவெளிச்சமாகிவிட்டது. மொத்த பட்ஜெட்டே ரூ 80 கோடிக்குள்தானாம்!


Click it and Unblock the Notifications