கார் மோதி விபத்து.. சிகிச்சை பலனின்றி 28 வயது இளைஞர் பரிதாப மரணம்.. சிக்கலில் சினேகன்
சென்னை: கவிஞர் சினேகன் ஓட்டி வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டதில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கவனக் குறைவாக கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சினேகன் மீது திருமயம் போலீசார் முன்னதாக வழக்கு பதிவு செய்திருந்த நிலையில், தற்போது புதிய வழக்குகள் பாய்ந்துள்ளன.
கவிஞர், நடிகர், பிக் பாஸ் பிரபலம், மநீம இளைஞரணி செயலாளர் என பன்முகத் தன்மை கொண்டவர் சினேகன் என்பது குறிப்பிடத்தக்கது.

பைக் மீது மோதிய கார்
கடந்த 16ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள சாவேரியார்புரத்தில் தாறுமாறாக கார் ஓட்டி வந்த சினேகன் இருசக்கர வாகனம் ஒன்றின் மீது மோதி விபத்து ஏற்படுத்தினார். இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த அருண் பாண்டி என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

28 வயசுதான்
திருமயம் வட்டம் ஊனையூர் அருகே உள்ள ஆலமரத்துக் குடியிருப்பைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் அருண் பாண்டி ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது சினேகன் ஓட்டி வந்த கார் எதிர்பாராதவிதமாக மோதியதில் விபத்து ஏற்பட்டது. அவருக்கு வயது 28.

சிகிச்சை பலனளிக்கவில்லை
திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அருண் பாண்டி, அதன் பின்னர், தலையில் பலத்த காயம் ஏற்பட்ட காரணத்தால், சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று அருண் பாண்டி பரிதாபமாக உயிரிழந்த தகவல் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிக்கலில் சினேகன்
கவனக்குறைவால் வாகனத்தை இயக்கிய கவிஞர் சினேகன் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் தற்போது 28 வயது இளைஞர் பரிதாபமாக பலியாகி உள்ளார். ஏற்கனவே சினேகன் மீது திருமயம் காவல்துறையினர் வழக்கு பதிந்த நிலையில், தற்போது, கவனக்குறைவால் மரணம் ஏற்படுத்துதல் மற்றும் விபத்து ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் சினேகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











