இனிதே முடிந்தது ‘அச்சம் என்பது மடமையடா’.. மாறி மாறி தேங்க்ஸ் சொல்லி கொண்ட சிம்புவும், கௌதமும்!
சென்னை: கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள அச்சம் என்பது மடமையடா படத்தின் 'தள்ளிப் போகாதே' பாடல் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
கெளதம் மேனன் இயக்கத்தில், சிம்பு நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் மீண்டும் இந்த கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்தது. இதனால் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்ற தள்ளிப் போகாதே பாடல், படம் வெளிவருவதற்குள் பெரும் ஹிட்டானது. ஆனால், இப்படத்தின் படப்பிடிப்பு இடைவெளி விட்டு விட்டு நடத்தப்பட்டதால், இந்தப் பாடல் மட்டும் படமாக்கப்படாமல் இழுபறியில் இருந்தது.
இதனால் இந்தப் பாடல் இல்லாமலேயே படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டது. இது தொடர்பாக சிம்பு, கௌதம் மேனன் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.
ஆனால் திடீரென இருதரப்பிலும் சமாதானமாகி தள்ளிப் போகாதே பாடலை பாங்காங்கில் படமாக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பாங்காங்கில் கடந்தவாரம் இப்பாடலின் படப்பிடிப்பு நடைபெற்றது.
இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் சிம்புவும், கௌதம் மேனனும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். சிம்பு தனது பதிவில், 'இது போன்ற நல்ல படத்தை தனக்கு உருவாக்கி கொடுத்த இயக்குநர் கௌதம் மேனனுக்கு நன்றி' எனத் தெரிவித்துள்ளார்.
இதேபோல், கௌதம் மேனன் தனது பதிவில், 'படம் மற்றும் இப்பாடலில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய சிம்புவிற்கு நன்றி. இதேபோன்று உங்கள் உழைப்பு தொடரட்டும்' எனப் பாராட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications











