கல்வி வியாபாரத்தை தோலுரித்துக் காட்ட வரும் 'அச்சமின்றி'!
உணவு, உடை, இருப்பிடம் என எந்த அடிப்படை வசதிகளில் குறை இருந்தாலும் பரவாயில்லை... எப்படியாவது பிள்ளைகளைப் படிக்க வைத்துவிட வேண்டும் என்ற நினைப்பு பெரும்பான்மை மக்கள் மனதில் இன்று வேரோடியிருக்கிறது.
மக்களின் இந்த மனநிலையை அவர்களின் பலவீனமாகக் கருதி, கல்வி வியாபாரிகள் கடைப் பரப்பி கல்வியை கனஜோராக விற்பனை செய்து வருகிறார்கள்.

இந்தப் பிரச்சினையை ஒரு திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் ராஜபாண்டி. என்னமோ நடக்குது என்ற சூப்பர் ஹிட் படத்தைத் தந்தவரின் அடுத்த படைப்பு இது.
அதே விஜய் வசந்த், தயாரிப்பாளர் வினோத்குமார், இசையமைப்பாளர் பிரேம்ஜி இந்தப் படத்தில் கைகோர்த்துள்ளனர் ராஜபாண்டியுடன். இந்தப் படத்தில் ராதாரவி மற்றும் சமுத்திரக்கனி முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
ஒரு பக்கா மாஸ் ஆக்ஷன் படமாக வந்துள்ள அச்சமின்றி டீசரை வரும் 13-ம் தேதி விஷால் வெளியிடுகிறார்.

படம் குறித்து இயக்குநர் ராஜபாண்டியிடம் பேசியபோது, "இது கமர்ஷியல் கலந்த, அதே நேரம் சமூக அவலத்தைப் பிரதிபலிக்கிற படம்.
இன்று குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதில் பெற்றோர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள், பெற்றோர்களுக்கு சமூகத்தின் மீது என்ன அக்கறை இருக்கிறது? அதே மாதிரி சமூகத்திற்கு மக்கள் மீது என்ன மாதிரியான அக்கறை இருக்கிறது என்பதை பக்கா கமர்ஷியல் படமாக எடுத்திருக்கிறோம். இன்றைய கல்விச் சூழலை அழுத்தமாகப் படம்பிடித்திருக்கிறோம். படத்தில் சமுத்திரக்கனிக்கு நீங்கள் எதிர்பார்க்காத ஒரு வேடம்.
நிறைய செலவு செய்திருக்கிறோம். படம் முழுமையாக முடிந்துவிட்டது. தேர்தல் முடிந்த பிறகு வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்," என்றார்.
"இந்தப் படத்தின் டீசரை பார்த்து வெகுவாக பாராட்டினார் நடிகர் விஷால் சார். அத்துடன் படத்தின் டீசரை இம்மாதம் 13 ம் தேதி அவரே வெளியிடுகிறார்.
அவருக்கும் எங்களது படக்குழு சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்," என்றனர் நாயகன் விஜய் வசந்தும், தயாரிப்பாளர் வி.வினோத்குமாரும்.


Click it and Unblock the Notifications











