எழுந்து நின்று கை தட்டி பாராட்டுங்கள் நடிகர் ஆரியை!
திண்டிவனம் : விவசாயத்தின் நலன் காக்க கின்னஸ் சாதனை முயற்சியாக 5000 மாணவர்களுடன் விதை நடும் நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்துகிறார் நடிகர் ஆரி. இந்த நிகழ்வு விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த ஆவணிப்பூர் கிராமத்தில் இன்று நடைபெறுகிறது.
'நெடுஞ்சாலை' படம் மூலம் பிரபலமானவர் நடிகர் ஆரி. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து 'தரணி', 'மாயா', 'உன்னோடு கா' உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது இவரது நடிப்பில் 'நாகேஷ் திரையரங்கம்' படம் உருவாகி வருகிறது.
நடிகர் ஆரி, படங்களில் நடிப்பதை தவிர்த்து, சமூகத்தில் பல நல்ல விஷயங்களில் தன்னுடைய பங்கை செலுத்தி வருகிறார். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, மதுரை, சென்னை உள்ளிட்ட பல இடங்களில் பொது மக்களோடு கலந்துக் கொண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தார்.

சமூகப் பணிகளில் ஆர்வம் :
நாடு முழுவதும் நடக்கும் வங்கிகளின் கட்டணக் கொள்ளையை எதிர்த்து 'அஞ்சல் துறைக்கு மாறுவோம்... வங்கிக்கொள்ளையை மாற்றுவோம்' என்று மாணவர்களுடன் இணைந்து இந்திய அஞ்சல் வங்கிக் கணக்கை தொடக்கிவைத்தார்.

விவசாயிகளின் கவலை :
'நம்ம நாட்டுல, விவசாயிகள் தற்கொலை பண்ணிக்கிறாங்க... பட்டினியா கிடந்து போராடிக்கிட்டிருக்காங்க. நம்ம நாட்டுல விவசாயிகளோட பிரச்னைகளை காதுகொடுத்துக் கேட்டால்தான் புரியும். நான் கேட்டேன். அவங்களுக்கு இயற்கை விவசாயம் பண்ண ஆசைதான். ஆனா, செயற்கை முறையைத்தான் அரசாங்கம் என்கரேஜ் பண்ணுது. இது விவசாயத்துக்குப் பண்ற துரோகம். எல்லாம் தெரிஞ்சும், வேற வழியில்லாமல்தான் விவசாயம் பார்க்கிறோம்ங்கிற குற்ற உணர்ச்சியோடுதான் விவசாயம் செய்துக்கிட்டிருக்காங்க. ' எனத் தெரிவித்திருக்கிறார் ஆரி.

களத்தில் இறங்கணும் :
‘இனி நானும் விவசாயத்தைக் கற்றுக்கொள்வேன். விவசாயிகளோட பிரச்சனைகளைப் புரிந்துகொள்வேன்'னு ஃபேஸ்புக், வாட்ஸ்அப்ல மட்டுமே பிரசாரம் பண்ணாம, ஒவ்வொரு நாளும் முயன்றுகொண்டே இருக்கணும். ஏன்னா, ஒவ்வொரு நாளும் நாம சாப்பிட்டுக்கிட்டுதான் இருக்கோம்!' என்கிறார் நடிகர் ஆரி.

'மாறுவோம் மாற்றுவோம்' :
தற்போது ‘மாறுவோம் மாற்றுவோம்' எனும் அறக்கட்டளையைத் தொடங்கியுள்ளார் ஆரி. கமல்ஹாசன் முன்னிலையில் இந்த அறக்கட்டளையின் தொடக்கவிழா நடைபெற்றது. இந்த அறக்கட்டளையின் சார்பில் 'நானும் ஒரு விவசாயி' எனும் கின்னஸ் சாதனைக்காக 5000 மாணவர்கள் பங்கேற்கும் நாற்று நடும் நிகழ்வு நடத்துகிறார்.
நானும் ஒரு விவசாயி :
விவசாயம் அழிந்து வரும் நிலையில், ‘நானும் ஒரு விவசாயி' எனும் கின்னஸ் சாதனை நிகழ்த்துவது பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











