நடிகர் சங்கத்தின் குருதட்சணை திட்டம் சிவக்குமார், சச்சு தொடங்கி வைத்தனர்
சென்னை: நடிகர் சங்கத்தின் குருதட்சணை திட்டத்தை நடிகர் சிவக்குமார், நடிகை சச்சு ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.
தமிழகமெங்கும் மூத்த தலைமுறை முதல் இளைய தலைமுறை அங்கத்தினர் வரையிலான கலைஞர்களின் முழு விபரங்கள் சேகரிக்கும் மற்றும் பதிவு செய்யும் நிகழ்ச்சி இன்று தொடங்கியது.
மூத்த மற்றும் நலிந்த கலைஞர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்திற்கு, நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் குருதட்சணை திட்டம் என்று பெயரிட்டுள்ளனர்.

இந்தத் திட்டத்தில் உறுப்பினர்களின் கலைத்திறன், முகவரி, குடும்பம் பற்றிய முழு விபரங்கள், குடும்ப உறுப்பினர்களுக்கு தேவையான கல்வி மற்றும் மருத்துவ உதவிகள் தேவப்பட்டால் அதைப் பற்றிய விபரங்கள் காப்பீடு என அனைத்து விபரங்களையும் நேரடியாக சேகரித்து பதிவு செய்து வருகின்றனர்.
மேலும் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கலைஞர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் ஒன்றையும் நடிகர் சங்க நிர்வாகிகள் இன்று தொடங்கி வைத்திருக்கின்றனர்.
தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான இந்தத் திட்டத்தை இன்று சென்னையில் தொடங்கி இருக்கும் நடிகர் சங்கம் விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் அங்கிருக்கும் நாடக சங்கங்களுடன் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
அனைத்துக் கலைஞர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டவுடன் அவற்றை இணையதளத்தில் பதிவு செய்து அதன் மூலம் தேவையான உதவிகளை சம்பந்தப்பட்ட கலைஞர்களுக்கு வழங்கிட நடிகர் சங்கம் முடிவெடுத்து உள்ளது.


Click it and Unblock the Notifications











