விபத்தில் சிக்கிய நடிகர் பாலகிருஷ்ணா.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்!
பெங்களூர்: தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பாலகிருஷ்ணா, கார் விபத்தில் சிக்கி நேற்று அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்திருக்கிறார்.
தெலுங்குலகின் சூப்பர் ஸ்டாரும், எம்எல்ஏவுமான நடிகர் பாலகிருஷ்ணா நேற்று தன்னுடைய சட்டமன்றத் தொகுதியான ஹிந்துபூர் சென்றுவிட்டு பெங்களூர் விமான நிலையத்துக்கு காரில் திரும்பி வந்தார்.
பாகபல்லி என்ற இடத்தில் பாலகிருஷ்ணாவின் கார் சென்றபோது அங்கிருந்த தடுப்புச்சுவரில் கார் மோதி விபத்துக்குள்ளாகியது.மேலும் காரின் முன்பக்க டயரும் வெடித்துச் சிதறியது.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பாலகிருஷ்ணாவும் அவருடன் உடன் வந்தவர்களும் காயம் ஏதுமின்றி தப்பினர். பின்னர் வேறொரு காரை வரவழைத்து பாலகிருஷ்ணா பெங்களூர் விமான நிலையம் சென்று அங்கிருந்து ஹைதராபாத் சென்றிருக்கிறார்.
இந்த விபத்து செய்தி ஆந்திரத் திரையுலகினர் மற்றும் அவரின் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. விபத்து ஏற்பட்டபோது பாலகிருஷ்ணா அந்தக் காரை ஓட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து விபத்தை நேரில் பார்த்த ஒருவர் '' பாலகிருஷ்ணா ஓட்டி வந்த காரின் டயர் வெடித்துச் சிதறியது. உடனே சாமர்த்தியமாக வண்டியை அவர் நிறுத்தி விட்டார்'' என்றார்.


Click it and Unblock the Notifications











