சினிமாவில் உள்ள சாக்கடையை சுத்தம் செய்கிறேன்..ஆதாரத்துடனே கிசுகிசு பேசுகிறேன்.. பயில்வான் ரங்கநாதன்!
சென்னை : தயாரிப்பாளர் கே. ராஜன் தன்னை பற்றி கூறிய அனைத்தும் பொய், ஆதாரத்துடன் தான் கிசுகிசு பேசுகிறேன், சினிமாவில் உள்ள சாக்கடையை சுத்தம் செய்கிறேன் என்று கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் பயில்வான் ரங்கநாதன். பல படங்களில் வில்லனாகவும் நகைச்சுவை நடிகராகவும் நடித்துள்ளார். பத்திரிக்கையாளராகவும் உள்ள பயில்வான் ரங்கநாதன், யூட்யூப் சேனலை நடத்தி வருகிறார்.
தனது யூட்யூப் சேனலில் தமிழ் சினிமா பிரபலங்கள் குறித்து ரகசியங்கள், சினிமா அப்டேட்டுகள், நடிகர் நடிகைகளின் அந்தரங்க விஷயங்கள் என அனைத்தையும் பேசி வருகிறார்.

கே.ராஜன் புகார்
பயில்வான் ரங்கநாதன் பெண்களை பற்றி சமூக வலைதளங்கள் மற்றும் யூட்யூப் சேனல்களில் அவதூறாக பேசுவதாக கூறி திரைப்பட தயாரிப்பளர் சங்கம், தமிழர் மக்கள் இயக்கம் சார்பில் ராஜன், இயக்குநர் திருமலை உள்ளிட்டோர் இணைந்து சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளனர்.

திருந்தவில்லை
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கே.ராஜன், நடிகர், நடிகைகளை இணைந்து பொய்யான செய்தியை பேசி அவர்களை மிரட்டி பணம் பறித்து வருகிறார். ராதிகா சரத்குமாரிடம் செருப்படி வாங்கிய போதும் இவர் திருந்தவில்லை. தொடர்ந்து அவதூறாகவே பேசிவருகிறார். இதனால் இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

முற்றிலும் பொய்
இந்நிலையில், தன்னைப் பற்றி அவதூறாக பேசியதாக திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பயில்வான் ரங்கநாதன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இவர், பத்திரிக்கை துறையில் தனக்கு 45 ஆண்டுகாலம் அனுபவம் இருப்பதாகவும், தன்னைப் பற்றி கே.ராஜன் கூறுவது முற்றிலும் பொய் என்றார்.

சினிமாவில் உள்ள சாக்கடைகள்
அப்போது, செய்தியாளர்கள், அவரை மடக்கி கேள்வி கேட்டனர். அப்போது திணறிப்போன பயில்வான் ரங்கநாதன், சினிமாக்காரன் என்றாலே மக்கள் மனதில் தவறான எண்ணம் உள்ளது. இதனால் சினிமாவில் உள்ள சாக்கடைகளை , அழுக்குகளை நீக்கவேண்டும் என்று நான் சொல்லிவருகிறேனே தவிர எந்தவிதமான உள்நோக்கமும் என்னிடம் இல்லை என்றார்.

நான் பேசுவது மட்டும் தவறா?
நடிகர், நடிகைகளை ஜாதி ரீதியாக அவதூறாக பேசுவது சரியா என செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளிக்க முடியாமல் கோவமடைந்தார். மேலும் காத்துவாக்குல 2 காதல் என்ற படத்தில் நடிகைகள் இருவர் இரட்டை அர்த்தமாக பேசும்போது, நான் வீடியோவில் பேசுவது என்ன தவறு? என விளக்கமளித்துள்ளார் பயில்வான் ரங்கநாதன்.


Click it and Unblock the Notifications











