கதிர் கேரக்டரில் மிரட்டிய தனுஷ்.. தொடர்ந்து நெகட்டிவ் கேரக்டர்களில் நடிப்பாரா.. ரசிகர்கள் கேள்வி!
சென்னை : நடிகர் தனுஷ் அடுத்தடுத்து திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் படங்கள் ரிலீசாகியுள்ளன.
தொடர்ந்து டிசம்பர் 2ம் தேதி தனுஷ் நடிப்பில் இருமொழிகளில் உருவாகியுள்ள வாத்தி படமும் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரு தினங்களுக்கு முன்பு வெளியான அவரது நானே வருவேன் படம் அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகியுள்ளது.

திருச்சிற்றம்பலம் படம்
நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெளியானது திருச்சிற்றம்பலம் படம். ஆண் -பெண் நட்பை மையமாக கொண்டு வெளியான இந்தப் படத்தை இயக்கியிருந்தார் மித்ரன் ஜவஹர். படத்தில் தனுஷிற்கு சமமாக நித்யா மேனனும் தன்னுடைய நடிப்பை பிரமாதமாக வெளிப்படுத்தி ரசிகர்களையும் விமர்சகர்களையும் கவர்ந்திருந்தார். அவருக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தன.

100 கோடி ரூபாய் கிளப்
திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷ், நித்யா மேனனுடன், பிரகாஷ்ராஜ், பாரதிராஜா, ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர். இதனிடையே இந்தப் படம் வெளியாகி 13 நாட்களிலேயே 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்தது. தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

நானே வருவேன் படம்
இதனிடையே தனுஷ் -செல்வராகவன் கூட்டணியில் உருவான நானே வருவேன் படம் கடந்த செப்டம்பர் 29ம் தேதி வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ள நிலையில், படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்தப் படத்தில் பிரபு மற்றும் கதிர் என இருவேறு வேடங்களில் தனுஷ் நடித்துள்ளார். ஹீரோ மற்றும் வில்லன் கேரக்டர்களில் அவர் நடித்துள்ள இந்தக் கேரக்டர்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

கதிர் கேரக்டரில் மிரட்டிய தனுஷ்
குறிப்பாக கதிர் கேரக்டரில் சிரித்துக் கொண்டே மிரட்டுகிறார் தனுஷ். நீண்ட தலைமுடி, கையில் வில் என அவரது லுக் அதகளப்படுத்துகிறது. ஹீரோவாக நடித்துள்ள பிரபு கேரக்டரை காட்டிலும், இந்த கதிர் கேரக்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் கதிர் கேரக்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

நெகட்டிவ் கேரக்டரில் தனுஷ்
இதனிடையே தனுஷ் இதுபோன்ற நெகட்டிவ் கேரக்டர்களில் தொடர்ந்து நடிப்பாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இயல்பான பக்கத்து வீட்டு பையன் லுக்கில் நடித்து அதன்மூலம் ரசிகர்களை கவர்ந்துவந்த நடிகர் தனுஷ், வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க மிகுந்த ஆர்வம் காட்டி வருபவர். இதனிடையே, கதிர் போன்ற சேலஞ்சிங்கான கேரக்டர்களில் அவர் நடிக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.

தனுஷின் பன்முகத் திறமை
கோலிவுட்டில் துவங்கிய தனுஷின் பயணம், பாலிவுட், ஹாலிவுட் என நீண்டுள்ளது. பலவிதமான சேலஞ்சிங்கான கேரக்டர்களில் நடித்து சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார் தனுஷ். பாடகர், பாடலாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் எனவும் பன்முகத்திறமை காட்டி வருகிறார்.


Click it and Unblock the Notifications











