ராஜ்கிரணை உரசிய நபரை திட்டித் தீர்த்த மருமகன் தனுஷ்
சென்னை: ராஜ்கிரன் மற்றும் அதர்வா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம் பட்டத்து அரசன்.
களவாணி திரைப்பட புகழ் இயக்குநர் சற்குணம் இயக்கியிருக்கும் இந்தப் படத்தின் புரமோஷனல் பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் படக்குழுவினர் பேட்டி கொடுக்கையில் நடிகர் ராஜ்கிரண் தனுசை பற்றி நெகிழ்ச்சியாக பேசி இருக்கிறார்.

பட்டத்து அரசன்
சண்டி வீரன் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் சற்குணம் மற்றும் நடிகர் அதர்வா மீண்டும் இணைந்து பணிபுரிந்துள்ள திரைப்படம் பட்டத்து அரசன். கபடி விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட கிராமத்து படம். வழக்கமாக கபடி படம் என்றால் இரு தரப்பினருக்கிடையே மோதல், டோர்னமெண்ட் போன்றவற்றை அடிப்படையாக வைத்துதான் எடுக்கப்படும். ஆனால் பட்டத்து அரசன் திரைப்படத்தில் ஒரு குடும்பமே போட்டி போட்டு கபடி விளையாடுவது பற்றிய கதையாம்.

தாத்தா மகன் பேரன்
ஒரு ஊரில் சற்குணம் மக்கள் கபடி விளையாடுவதை பார்த்திருக்கிறார். அதில் விளையாடியவர்கள் மூன்று தலைமுறையைச் சேர்ந்த தாத்தா மகன்கள் மற்றும் பேரன்கள் என்று அங்கிருந்தவர்கள் சொல்ல, அப்போதுதான் பட்டத்து அரசன் திரைப்படத்தின் யோசனை அவருக்கு தோன்றியதாம். தாத்தாவாக ராஜ்கிரனும் ஒரு இளைஞனாக அதர்வாவும் நடித்தால் எப்படி இருக்கும் என்று கதையை உருவாக்கியுள்ளார்.

மருமகன் தனுஷ்
சற்குணம் ஏற்கனவே நையாண்டி திரைப்படத்தில் தனுஷ் உடன் பணிபுரிந்துள்ளார் அது மட்டுமின்றி தனுஷ் ராஜ்கிரனுக்கு நெருக்கம் என்பதால் அந்த நிகழ்ச்சியில் தனுஷ் பற்றிய கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ராஜ்கிரன், தனுஷின் அம்மா எனது தங்கை. தனுஷ் எனக்கு மருமகன். சிறு வயதிலிருந்து தனுஷ் என்னை பார்த்து வளர்த்ததால் மாமா என்றுதான் கூப்பிடுவார். என் மீது பேரன்பு கொண்டவர் தனுஷ். அதனால்தான் முதல் படத்தை அவர் இயக்கியபோது என்னை அதில் கதாநாயகனாக நடிக்க வைக்க வேண்டும் என்று மிகவும் விருப்பப்பட்டார்.

திட்டுவார்
பவர் பாண்டி படப்பிடிப்பில் தனுஷும் ஒளிப்பதிவாளர் வேல்ராஜும் படுவேகமாக பணிபுரிவார்கள். வழக்கமாக படப்பிடிப்பில் ஒரு ஷாட் மாற்றி அமைக்கும் பொழுது நடிகர்களுக்கு நேரம் கிடைக்கும். அப்போது நான் புகை பிடிக்க செல்வேன். ஆனால் அந்தப் படப்பிடிப்பில் சிறிது நேரத்திலேயே துணை இயக்குநர் வந்து ஷாட் ரெடி என்று கூறுவார். எனக்கு ஆச்சரியமாக இருக்கும். அப்படி ஒரு முறை துணை இயக்குநர் என்னை அழைத்தபோது தனுஷ் பார்த்துவிட்டதால் அவரை அழைத்து, ஐயா புகைப்பிடிக்கும் பொழுது தொந்தரவு செய்கிறாயா என்று சத்தம் போட்டார். அதேபோல படப்பிடிப்பில் இருந்த ஒரு நபர் பரபரப்பாக வேலை செய்தபோது தெரியாமல் வேகமாக என்னை உரசிச் சென்று விட்டார். அப்போதும், ஐயா நின்று கொண்டிருப்பது உங்களுக்கு தெரியவில்லையா என்று அந்த நபரை திட்டிவிட்டார். என்னை அவ்வளவு பத்திரமாக பார்த்துக் கொண்டார் தனுஷ் என்று ராஜ்கிரண் கூறியிருக்கிறார். ராஜ்கிரண்தான் தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜாவை இயக்குநராக அறிமுகப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











