மாரடைப்பு.. நடிகர் அருண் அலெக்ஸாண்டர் திடீர் மரணம்.. கைதி, பிகில், மாஸ்டர் படங்களில் நடித்தவர்!
சென்னை: டப்பிங் கலைஞரும், நடிகருமான அருண் அலெக்ஸாண்டர் மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 48.
சென்னையைச் சேர்ந்தவர் அருண் அலெக்ஸாண்டர். கடந்த சில வருடங்களாக டப்பிங் கலைஞராகப் பணியாற்றி வந்தார்.
அவதார் உள்ளிட்ட புகழ்பெற்ற ஹாலிவுட் படங்களின் முக்கிய கேரக்டர்களுக்கு டப்பிங் பேசியிருக்கிறார்.

கார்த்தியின் கைதி
ஷாயாஜி ஷிண்டே உள்ளிட்ட வட இந்திய நடிகர்கள் சிலருக்கும் டப்பிங் பேசியிருக்கிறார். இவர், கடந்த 2016 ஆம் ஆண்டில் இருந்து தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வந்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம், நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா, விஜய்யின் பிகில், கார்த்தியின் கைதி உட்பட பல படங்களில் அருண் அலெக்ஸாண்டர் நடித்துள்ளார்.

உடற்பயிற்சிக் கூடம்
பொங்கலுக்கு வெளியாக இருக்கும் மாஸ்டர் படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் இவர். சென்னை அடையாறு பகுதியில் வசித்து வந்த நடிகர் அருண் அலெக்ஸாண்டர், வடபழனியில் உள்ள உடற்பயிற்சிக் கூடம் ஒன்றில் வழக்கம் போல, நேற்று மாலை உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார்.

தீவிர சிகிச்சை
அப்போது அவருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. மயங்கி கீழே விழுந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு, வடபழனியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்த்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

டப்பிங் கலைஞர்கள்
இது, டப்பிங் கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் மறைவுக்கு திரையுலகினரும், டப்பிங் கலைஞர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பலர் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர். மறைந்த அருண் அலெக்ஸாண்டருக்கு மனைவி மற்றும் மகள் உள்ளனர்.
ஈடுசெய்ய முடியாதவர்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ட்விட்டரில் தெரிவித்துள்ள இரங்கலில், இவ்வளவு விரைவாக எங்களை விட்டுச் செல்வீர்கள் என்று நினைக்கவில்லை அண்ணா. என் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. நீங்கள் ஈடு செய்ய முடியாதவர். என்றும் என் இதயத்தில் வாழ்வீர்கள் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











