நக்கல், நையாண்டி நாயகன் கவுண்டமணியின் 82வது பிறந்தநாள்... குவியும் வாழ்த்துக்கள்!
சென்னை : 80களில் சிறப்பான நகைச்சுவை நடிகராக வலம்வந்தவர் நடிகர் கவுண்டமணி.
தனியாகவும், நடிகர் செந்திலுடனும் இணைந்து இவர் செய்த காமெடி கலாட்டாக்கள் மிகவும் அலாதியானவை.
இன்றைய தினம் இவர் தனது 82வது பிறந்ததினத்தை கொண்டாடி வருகிறார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

நடிகர் கவுண்டமணி
80களின் சிறப்பான நகைச்சுவை நடிகராக வலம்வந்தவர் நடிகர் கவுண்டமணி. அப்போதைய நாயகர்களுக்கு இணையாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர் கவுண்டமணி. இவரது கால்ஷீட்டை வாங்கியபின்பே ஹீரோக்களின் கால்ஷீட் குறித்து அப்போதைய தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் யோசிப்பார்கள் என்று கூறப்படுவதுண்டு.

சிறப்பான காம்பினேஷன்
ஓரு காலகட்டத்தில் தன்னுடைய நக்கல், நையாண்டியால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த கவுண்டமணி செந்திலுடன் இணைந்து டைமிங் காமெடியிலும் கலக்கினார். இவர்கள் இருவரின் காம்பினேஷன், ஹீரோ -ஹீரோயின் காம்பினேஷனுக்கு இணையான வரவேற்பை அந்த காலகட்டத்தில் பெற்றது.

திட்டுவதில் காமெடி
இவர்கள் இருவரின் வாழைப்பழ காமெடியை அவ்வளவு சீக்கிரத்தில் யாரும் மறந்துவிட முடியாது. இதேபோல பல்வேறு கான்செப்ட்களில் இவர்கள் கலக்கியிருப்பார்கள். குறிப்பாக கவுண்டமணி, செந்திலை பன்னி மூஞ்சு வாயா உள்ளிட்ட வார்த்தைகளால் திட்டுவது உள்ளிட்டவற்றாலும் கலக்கியிருப்பார்.

காமெடி வசனங்கள்
ஆரம்பத்தில் இவர் தனியாக செய்த காமெடி கதாபாத்திரங்களில் இவரது பத்த வச்சிட்டியே பரட்ட, சரோசா குப்பை கொட்றியா கொட்டு, கொட்டு, சொப்பன சுந்தரிய யார் வச்சிருக்கான்னு கேக்கறாம்பா, நான் ரொம்ப பிசி உள்ளிட்ட காமெடி வசனங்கள் இப்போதுவரை ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருக்கக்கூடியவை.

இணையான கேரக்டர்கள்
தொடர்ந்து டாட்டா பிர்லா, உள்ளத்தை அள்ளித்தா, உனக்காக எல்லாம் உனக்காக, மேட்டுக்குடி, வில்லாதிவில்லன், ஜெய்ஹிந்த், மன்னன் உள்ளிட்ட படங்களில் ஹீரோக்களுக்கு இணையான கேரக்டர்களில் அவர்களுக்கு ஸ்டப் கொடுக்கும் வகையில் கேரக்டர்களை செய்திருந்தார் கவுண்டமணி.

சிறப்பாக பயன்படுத்திய டைரக்டர்கள்
இவரது டயலாக், பாடி லாங்குவேஜ் என ஒவ்வொன்றும் ஒரு ரகம்... புதுரகம். இவரது காமெடிக்காகவே படங்கள் அதிகமான நாட்கள் தியேட்டர்களில் ஓடிய காலங்களும் உண்டு. கரகாட்டக்காரன் உள்ளிட்ட படங்களை இதற்கு எடுத்துக்காட்டாக கூறலாம். ஆர் சுந்தரராஜன், மணிவண்ணன் உள்ளிட்ட இயக்குநர்களும் இவரது நகைச்சுவையை சரியாக பயன்படுத்தினர்.

காமெடி பசிக்கு தீனி
அவர் தன்னுடைய நடிப்பை தொடராத நிலையில் தற்போதும் சமூக வலைதளங்களிலும் சரி தொலைக்காட்சிகளிலும் சரி இவரது காமெடி மற்றும் காமெடி வசனங்கள் ரசிகர்களின் காமெடி பசிக்கு தீனி போட்டுக் கொண்டுள்ளன. காமெடி என்ற சொல் இருக்கும்வரை இவரது காமெடி மட்டுமே முன்னிலையில் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை....


Click it and Unblock the Notifications











