8 ஆண்டுகளுக்கு முன் ரசிகரை அறைந்த வழக்கு... மன்னிப்பு கேட்டார் கோவிந்தா... இழப்பீடு தரவும் ஓகே!
டெல்லி: ரசிகரை அடித்தது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட ரசிகரிடம் மன்னிப்பு கோரியுள்ளார் நடிகர் கோவிந்தா.
பாலிவுட்டின் பிரபல நடிகர்களுள் ஒருவர் கோவிந்தா (52). திறமையான நடிப்புடன், தேர்ந்த நடன அசைவுகளாலும் கோவிந்தாவிற்கென பெரிய ரசிகப்பட்டாளமே இருக்கிறது.
இவர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி.யும் ஆவார்.

ஷூட்டிங்...
கடந்த 2008ம் ஆண்டு மும்பை பிலிமிஸ்தான் ஸ்டூடியோவில், கோவிந்தாவின் ‘மனி ஹேய் டூ மனி ஹேய்' என்ற படத்தின் படப்பிடிப்பு நடந்தது. அப்போது கோவிந்தாவைப் பார்க்க வந்தார் சந்தோஷ் படேஷ்வர் ரே என்ற ரசிகர்.

அறை...
கோவிந்தாவை அவர் பார்க்க முயற்சித்த போது, கோபத்தில் அவரை கோவிந்தா கன்னத்தில் அறைந்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த ரசிகர், மும்பை நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தார்.

வீடியோ ஆதாரம்...
ஆனால், அந்த வழக்கை ஹைகோர்ட் ரத்து செய்தது. இதையடுத்து அவர் சுப்ரீம் கோர்ட்டிற்கு இந்த விவகாரத்தைக் கொண்டு சென்றார். தான் தாக்கப்பட்டதற்கு ஆதாரமாக ஒரு வீடியோவையும் அவர் தாக்கல் செய்தார். ஆனால், அது திரிக்கப்பட்டது என கோவிந்தா தரப்பில் வாதாடப்பட்டது. அதனை கோர்ட் நிராகரித்தது.

மன்னிப்பு கேட்க வேண்டும்...
சம்மந்தப்பட்ட ரசிகரிடம் நடிகர் கோவிந்தா நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கடந்த நவம்பர் மாதம் உத்தரவிடப்பட்டது. ஆனால் அப்போது அவர் கேட்கவில்லை.

இழப்பீடு...
இந்நிலையில், அந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் வி.கோபால கவுடா, யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘வழக்குதாரர் சந்தோஷ் ரேயிடம் நடிகர் கோவிந்தா மன்னிப்பு கேட்க தயார். ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் தயார்'' என கோவிந்தாவின் வக்கீல் தெரிவித்தார்.

2 வாரங்களுக்குள்...
அதனைத் தொடர்ந்து, இப்பிரச்சினையை 2 வாரங்களுக்குள் பேசி தீர்த்துக் கொள்ளுமாறு கோர்ட் அறிவுறுத்தியது.

மன்னிப்பு கேட்ட கோவிந்தா..
இந்நிலையில், நேற்று மாலைச் செய்தியாளர்களைச் சந்தித்த கோவிந்தா, தன்னிடம் அறை வாங்கிய ரசிகரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக அறிவித்தார். மேலும், ‘மன்னிப்பு கேட்குமாறு கூறப்பட்டுள்ளதால், இதை கேட்கிறேன். நீதித்துறை சொன்ன எல்லாவற்றையும் நான் செய்திருக்கிறேன்.

கசப்புணர்வு இல்லை...
அந்த ரசிகர் மீது எனக்கு கசப்புணர்வு எதுவும் இல்லை. அவரது திருப்திக்காகவும், நீதித்துறையின் திருப்திக்காகவும் எல்லாவற்றையும் செய்தேன். அவரை ஏற்கனவே சந்தித்து இருக்கிறேன். மீண்டும் சந்திப்பேன்.

இழப்பீடு தரத் தயார்...
தனக்கு மரியாதை தர வேண்டும், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும், இழப்பீடு அளிக்க வேண்டும் என்று அந்த ரசிகர் கேட்டுள்ளார். சுப்ரீம் கோர்ட்டு முடிவை ஏற்று, இது எல்லாவற்றையும் நான் செய்து விட்டேன்' என இவ்வாறு அவர் கூறினார்.

அது ரகசியம்...
அப்போது இழப்பீடு எவ்வளவு தரப்போகிறீர்கள் என செய்தியாளர்கள் அவரிடம் கேட்டனர். ஆனால், அதனைக் கூற கோவிந்தா மறுத்துவிட்டார்.

போதாது... போதாது
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட ரசிகர் சந்தோஷ் கூறுகையில், "இந்த வழக்குக்காக ரூ.10 லட்சத்துக்கும் மேல் செலவு செய்துவிட்டேன். இந்த இழப்பீடு போதாது. அதை ஏற்கும் கேள்விக்கே இடம் இல்லை'' எனத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











