காக்கிச் சட்டை ஆசை ஜெய்யையும் விட்டுவைக்கவில்லை!
சென்னை: முண்டாசுப்பட்டி ராம் இயக்கத்தில் முதன்முறையாக போலீஸ் வேடமேற்று நடிக்கவிருக்கிறார் ஜெய்.
'பகவதி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஜெய் தொடர்ந்து சுப்ரமணியபுரம், சென்னை 28, எங்கேயும் எப்போதும், கோவா, ராஜா ராணி போன்ற ஹிட் படங்களில் நடித்து தன்னை தக்கவைத்துக் கொண்டார்.

ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் ஜெய் நடிப்பில் வெளியான புகழ் திரைப்படம் அவர் எதிர்பார்த்த வெற்றியை பெறத்தவறி விட்டது.
இந்நிலையில் 'முண்டாசுப்பட்டி' புகழ் ராம் இயக்கும் அடுத்த படத்தில், முதன்முறையாக ஜெய் போலீஸ் வேடமேற்று நடிக்கவிருக்கிறார்.
சி.வி.குமார் தயாரிக்கும் இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். தமிழ்நாட்டில் தற்போது தேர்தல் களைகட்டி வருவதால், தேர்தல் முடிந்தவுடன் படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு முடிவு செய்துள்ளது.
இப்படத்திற்கான நடிக, நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.இது முடிந்தவுடன் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் 'சென்னை 28 படத்தின் 2 வது பாகத்தில் ஜெய் நடிக்கவுள்ளார்.
என்னை அறிந்தால், தெறி படங்களில் அஜீத், விஜய் இருவரும் போலீஸ் வேடமேற்று நடித்திருந்தனர். அந்த வரிசையில் தற்போது ஜெய்யும் இணையவிருக்கிறார்.
தனது 14 வருடங்களுக்கும் மேலான திரை வாழ்க்கையில் போலீஸாக, ஜெய் நடித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











