பாடல்களை உலகுக்குப் பரிசளித்த பறவையாக வாழ்ந்த வாணி ஜெயராம்... ட்வீட்டரில் கமல் புகழஞ்சலி
சென்னை: இந்திய திரையுலகின் லிஜெண்ட்ரி பாடகராக வலம் வந்த வாணி ஜெயராம் அவரது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 78.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உட்பட பல மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி புகழ் பெற்றவர் வாணி ஜெயராம்.
இந்நிலையில் வாணி ஜெயராமின் உயிரிழப்பை இயற்கைக்கு மாறானது என போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே வணி ஜெயராம் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் சூழலில், நடிகர் கமல்ஹாசன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

மர்மமான முறையில் உயிரிழப்பு
1971ம் ஆண்டு இந்தியில் வெளியான 'குட்டி' படத்தில், 'போலே ரே பப்பி ஹரா' பாடலைப் பாடி பின்னணிப் பாடகியாக அறிமுகமானவர் வாணி ஜெயராம். தீர்க்க சுமங்கலி படத்தில் 'மல்லிகை என் மன்னன் மயங்கும்' என்ற பாடலை பாடி தமிழிலும் ரசிகர்களை தன் குரலுக்கு அடிமையாக்கினார். இன்று ரசிகர்களால் வாணி அம்மா என்று அழைக்கப்படும் அவரது திரையிசைப் பயணம் நான்கு தலைமுறைகளை கடந்தது. இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார்.

போலீஸார் விசாரணை
நெற்றியில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட வாணி ஜெயராமின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்து. இந்த மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் முதல் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதனிடையே வாணி ஜெயராம் வீட்டு பணிப்பெண் மலர்கொடி என்பவர் இந்தச சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

கமல்ஹாசன் புகழஞ்சலி
அதில், "வாணி ஜெயராம் கணவர் 10 ஆண்டுகளுக்கு முன்பே உயிரிழந்ததால் அவர் மட்டும் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், காலை வழக்கம்போல வீட்டுக்குச் சென்று காலிங் பெல் அடித்தேன். கிட்டதட்ட 5 முறை அடித்தும் அவர் திறக்கவில்லை. உடனே போன் செய்து பார்த்தேன். அழைப்பை எடுக்கவில்லை. என் கணவருக்கு போன் செய்து விஷயத்தை சொன்னேன். அதன் பின் அனைவரும் சேர்ந்து போலீஸாருக்கு தகவல் சொன்னதாக" கூறியுள்ளார். இந்நிலையில் வாணி ஜெயராம் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

பாடல்களை பரிசளித்த பறவை
அதில், "வார்த்தைகளுக்குப் பதவி உயர்வு கொடுப்பது போன்றதொரு அரிய பாணியில் எத்தனையோ பாடல்களை உலகுக்குப் பரிசளித்த பறவையாக வாழ்ந்த வாணி ஜெயராம் அம்மையார் அமைதியடைந்திருக்கிறார். அவர் பாடல்கள் நம்மிடம் இருக்கும். அவருக்கென் அஞ்சலி" எனக் குறிப்பிட்டுள்ளார். கடந்த மாதம் குடியரசு தினத்தில் வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது. ஆனால் அதனை பெற்றுக்கொள்ளும் முன்னரே வாணி ஜெயராம் உயிரிழந்தது ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











