இரண்டாம் எலிசபெத் இயற்கை எய்திய செய்தியைக் கேட்டு துயருற்றேன்: ட்வீட்டரில் கமல் இரங்கல்
சென்னை: இங்கிலாந்தை சுமார் 70 ஆண்டுகள் ஆட்சி செய்த ராணி இரண்டாம் எலிசபெத் நேற்று காலமானார், அவருக்கு வயது 96..
1997ல் சென்னையில் நடைபெற்ற கமலின் மருதநாயகம் படத் தொடக்க விழாவில், ராணி இரண்டாம் எலிசபெத் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
இந்நிலையில் ராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு நடிகர் கமல் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மறைந்தார் ராணி இரண்டாம் எலிசபெத்
இங்கிலாந்து வரலாற்றில் மிக நீண்ட காலம் மகாராணியாக இருந்து இரண்டாம் எலிசபெத். நேற்று காலமானார். அவருக்கு வயது 96. கடந்த சில நாட்களாக ராணி எலிசபெத்தின் உடல்நிலை மோசமாக இருந்ததால், ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோர் அரண்மனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று உயிரிழந்த ராணி எலிசபெத்துக்கு, கண்ணீர் மல்க மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மருதநாயகம் படப்பிடிப்பில் மகாராணி
ராணி இரண்டாம் எலிசபெத் இந்தியாவிற்கு 3 முறை வருகை தந்துள்ளார். முதல் முறையாக 1961ம் ஆண்டிலும், இரண்டாவதாக 1983ம் ஆண்டிலும் இந்தியா வந்துள்ளார் அதன்பின்னர் மூன்றாவது முறையாக 1997ல் இந்தியா வந்த ராணி இரண்டாம் எலிசபெத், கமலின் மருதநாயகம் படத் தொடக்கவிழாவில் கலந்துகொண்டார். அப்போதே பல கோடி செலவில் மிகப் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட இந்தப் படம், அதன்பின்னர் முழுமையடையாமல் போனது.

மகாராணிக்கு கெளரவம் கொடுத்த கமல்
18ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகக் போராடி வீரமரணம் அடைந்த முகமது யூசுஃப் கான் குறித்த திரைப்படம்தான் மருதநாயகம். இதன் படப்பிடிப்பு எம்.ஜி.ஆர் ஃபிலிம் சிட்டியில் தொடங்கிய போது, இங்கிலாந்து ராணி எலிசபெத் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மேலும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, நடிகர்கள் ரஜினி, சிவாஜி உள்ளிட்ட பலரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். சுமார் 20 நிமிடங்கள் வரை படப்பிடிப்பு தளத்தில் இருந்த இரண்டாம் எலிசபெத்துக்கு, ஒரு சண்டைக் காட்சியும் போட்டுக் காண்பிக்கப்பட்டது.

மகாராணிக்கு கமல் இரங்கல் ட்வீட்
மருதநாயகம் படப்பிடிப்பில் இங்கிலாந்து ராணி கலந்துகொண்டதால், இந்தப் படம் சர்வதேச அளவில் கவனம் பெற்றது. இந்நிலையில், ராணி இரண்டாம் எலிசபெத் காலமானதை அறிந்த நடிகர் கமல், அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். "எழுபதாண்டுகளாக இங்கிலாந்தின் மகாராணியாக திகழ்ந்த இரண்டாம் எலிசபெத் இயற்கை எய்திய செய்தியைக் கேட்டு துயருற்றேன். ஆங்கிலேயர்கள் மட்டுமல்லாது, அகில உலகத்தவரின் நேசத்தையும் பெற்றவராக அவர் விளங்கினார்" என கமல் தனது ட்விட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











