விவசாயிகளிடம் தான் பேரம் பேசுறோம்... உழவர் விருதுகள் விழாவில் கார்த்தி வேதனை
சென்னை: கோலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி தற்போது ஜப்பான் படத்தில் நடித்து வருகிறார்.
நடிப்பு ஒருபக்கம் இருப்பினும் விவசாயிகளின் நலனுக்கான உழவன் பவுண்டேசன் என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார்.
இந்த அறக்கட்டளையின் சார்பில் விவசாயிகளில் சிறந்த 5 பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து உழவன் பவுண்டேசன் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி, விவசாயிகளிடம் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என விளக்கம் அளித்தார்.

பாக்ஸ் ஆபிஸ் கிங் கார்த்தி
2022ம் ஆண்டில் கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வந்துள்ளார் கார்த்தி. விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் என தொடர்ந்து மூன்று ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த கார்த்தி, தற்போது ஜப்பான் படத்தில் நடித்து வருகிறார். இந்தாண்டும் கார்த்தியின் நடிப்பில் ஜப்பான், பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் உள்ளிட்ட படங்கள் வெளியாக காத்திருக்கின்றன. இந்நிலையில், விவசாயிகளின் நலனுக்காக உழவன் பவுண்டேசன் என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார் கார்த்தி.

கார்த்தியின் உழவன் பவுண்டேசன்
உழவுக்காக பல்வேறு செயல்திட்டங்களுடன் தொடங்கப்பட்ட கார்த்தியின் உழவன் பவுண்டேசன் தொடர்ந்து வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் விவசாயத்தில் சிறந்து விளங்கும் பெண்கள், மாணவர்கள், மாற்றுத் திறனாளி விவசாயிகள் போன்றவர்களை தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கி கெளரவித்து வருகிறார். அதன்படி 2023ம் ஆண்டுக்கான உழவன் விருதுகளும் சென்னையில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது.

செய்தியாளர்கள் சந்திப்பு
அதனைத் தொடர்ந்த் செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி, மக்கள் அனைவரும் விவசாயத்தை பற்றி சிந்திக்க வேண்டும், விவசாயிகளை பற்றியும் அவர்களது வாழ்வாதாரம் குறித்தும் யோசிக்க வேண்டும். அதனால் தான் அவர்களை இங்கே வரவழைத்து மரியாதை செய்து அடையாளப்படுத்துகிறோம். மேலும் யார் இந்த சமூகத்தின் உண்மையான ஹீரோக்கள் என்பதை மக்களுக்கு காட்டவே இந்த விழா என்றார். உணவுக்காக மண்ணோடு போராடும் விவசாயிகள் தங்களுக்காக எதுவுமே எதிர்பார்ப்பது கிடையாது. இதுமாதிரி விருதுகள், அங்கீகாரங்கள் என எதற்கும் ஆசைப்படாத அவர்களை சிறப்பிக்க வேண்டும் என்பதே ஆசை என்றார்.

விவசாயிக்ளிடம் தான் பேரம் பேசுறோம்
தொடர்ந்து பேசிய கார்த்தி, இந்த முறை மொத்தம் 5 விருதுகள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், சில நலத்திட்ட உதவிகளும், நவீன கருவிகளும் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளதாக கூறினார். அதேபோல், நெல் மட்டும் இல்லாமல் சிறுதானியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதற்கான தேவைகளை ஏற்பாடு செய்துகொடுக்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தார். அதேபோல் அதிகாலையில் சந்தைக்கு செல்லும் விவசாயிகளுக்கு பொது போக்குவரத்து ஏற்பாடு செய்யவும் கோரிக்கை விடுத்தார். முக்கியமாக ஜீன்ஸ், வாட்ச் வாங்க போகும் போது விலை கேட்காமல் வாங்கும் நாம், கீரை கட்டு வாங்க பேரம் பேசுறோம். இதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். விவசாயிகளின் நலனை நாம் தான் பாதுகாக்க வேண்டும் எனவும் பேசினார்.


Click it and Unblock the Notifications











