அந்த கட்சியின் பாட்டுக்கு டான்ஸ் ஆடக்கூடியவர் விஜய்.. அதிரடி விமர்சனத்தை முன் வைத்த கருணாஸ்!
சென்னை: நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்த பின்னர் திரை வாழ்க்கையில் அவருடன் நட்பாக இருந்தவர்கள் தொடங்கி பலரும் அவருக்கு எதிரான விமர்சனத்தை முன் வைத்து வருகிறார்கள். ஏற்கனவே நடிகர் சரத்குமார் மிகவும் காட்டமாக விமர்சனத்தை முன் வைத்திருந்த நிலையில், தற்போது நடிகர் கருணாஸ் அதைவிட காட்டமான விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.
நடிகர் விஜய் கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தனது ரசிகர் மன்றத்தை கட்சியாக மாற்றி அறிவித்தார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். கட்சி தொடங்கி சில மாதங்களில் நடைபெற்ற மக்களவை பொதுத் தேர்தலில் அவரது கட்சி போட்டியிடவில்லை. கடந்த ஆண்டு ஒரு மாநாடு, இந்த ஆண்டு ஒரு மாநாடு என மொத்தம் இரண்டு மாநாடுகளை அவரது கட்சி நடத்தியுள்ளது.
கடந்த மாதத்தில் கரூரில் அவர் நடத்திய பிரச்சார பொதுக்கூட்டத்தில் 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இது இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு முன்னரே தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அதன் தொண்டர்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர். விஜய்யை பலரும் விமர்சித்து வந்தனர். ஆனால் கரூர் துயர சம்பவத்திற்கு பின்னர், விஜய் தொடங்கி, அவரது கட்சி பொறுப்பாளர்கள், கட்சி உறுப்பினர்கள், விஜய் ரசிகர்கள் என அனைவர் மீதும் விமர்சனங்கள் என்பது யாரும் எதிர்பார்க்காத அளவில் இருந்தது.

கருணாஸ் விமர்சனம்: பாதிக்கப்பட்ட மக்களை விஜய் நேரில் சென்று சந்தித்து இதுவரை அறுதல் கூறாமல் இருப்பது என்பது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. இப்படி இருக்கும்போது, நடிகர் மற்றும் முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸ் விஜய்யை மிகவும் காட்டமாக விமர்சித்துள்ளார். அதாவது, " பாரதிய ஜனதா கட்சி கம்போஸ் செய்த பாடலுக்கு டான்ஸ் ஆடக்கூடிய நடிகர் ( விஜய்) ஒருவர் கிடைத்துள்ளார். பனையூரில் பூட்டு உள்ளே போடப்பட்டு இருக்கா? இல்லை வெளியே போடப்பட்டு இருக்கா என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும் என்று மிகவும் காட்டமாகவும் மறைமுகமாகவும் விமர்சித்துள்ளார். இவரது இந்த விமர்சனம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

காரணம் என்ன?: கருணாஸ் இவ்வாறு விமர்சிக்க அரசியல் வட்டாரத்தில் சில பேச்சுக்கள் ஓடிக் கொண்டு உள்ளது. கரூர் துயர சம்பவத்திற்கு பின்னர், நடிகர் விஜய் மிகவும் முக்கியமான முடிவு ஒன்றை எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது. அதாவது, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணி வைக்க விஜய் முடிவெடுத்து விட்டதாக கூறப்படுகிறது. அதை மனதில் கொண்டுதான் கருணாஸ் விஜய்யை காட்டமாக விமர்சித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











