4,5 படங்கள் நடித்தவுடன் முதலமைச்சர் ஆக ஆசைப்படுவது தவறு- கருணாஸ்
சென்னை: நான்கைந்து படங்கள் நடித்தவுடன் முதலமைச்சர் ஆக ஆசைப்படுவது தவறு என நடிகர் கருணாஸ் தெரிவித்திருக்கிறார்.
சினிமாவில் நடிகராக வலம்வரும் கருணாஸ் அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திருவாடானை தொகுதியில் போட்டியிட்டு, எம்எல்ஏவாக சட்ட சபையில் நுழைந்திருக்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் ''எம்எல்ஏ பணிகளில் பிஸியாக இருப்பதால் நடிகர் சங்க துணைத்தலைவர் பதவியை விரைவில் ராஜினாமா செய்யவிருக்கிறேன்.

நடிப்பு, எம்எல்ஏ பதவி, நடிகர் சங்க துணைத்தலைவர் போன்றவற்றால் எனது குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட முடியாத சூழல் உருவாகியுள்ளது.
எனது தொகுதி பிரச்சினைகளை தீர்க்கவும் முயற்சி செய்து வருகிறேன். என்னுடைய தொகுதியின் பிரச்சினைகளை முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் மனு கொடுத்திருக்கிறேன்.
அவர் விரைவில் இப்பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பார். சமுதாயத்தில் உழைப்பவர்கள் அரசியலுக்கு வரவேற்கப்படுகின்றனர். ஆனால் நான்கைந்து படங்களில் நடித்து விட்டு முதலமைச்சர் ஆக ஆசைப்படுவது தவறு.
ஏனெனில் தற்போதைய மக்கள் மிகவும் புத்திசாலிகள். அவர்களை நாம் ஏமாற்ற முடியாது'' என்று தெரிவித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











