'இதுக்கு நான் ஏன் வெட்கப்படணும்..?' வரிசையில் நின்று ரேஷனில் இலவச அரிசியை வாங்கிய பிரபல நடிகர்!
திருவனந்தபுரம்: வரிசையில் நின்று ரேஷன் அரிசி வாங்கிய பிரபல நடிகர், தனது சிறுவயது நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.
கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. சீனாவில் உருவான இந்த வைரஸ், இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்தியாவிலும் கொரோனா பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சமூக விலகல்
இந்நிலையில் வரும் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சமூக விலகலைக் கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அவர்கள் வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்றனர். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சினிமா, டிவி தொடர், படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நடிகர், நடிகைகளும் வீட்டுக்குள் இருக்கின்றனர்.

இலவச ரேஷன் அரிசி
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உலக நாடுகள் தீவிர முயற்சி எடுத்துவருகின்றன. இந்நிலையில், கேரள மாநிலத்தில் கொரோனா காரணமாக, அனைவருக்கும் 15 கிலோ இலவச அரிசி, ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது. இந்நிலையில், பிரபல மலையாள காமெடி நடிகர் மணியன்பிள்ளை ராஜு, வரிசையில் நின்று இந்த இலவச அரிசியை வாங்கியுள்ளார். ஏராளமான படங்களில் நடித்துள்ள அவர், சில படங்களைத் தயாரித்தும் உள்ளார்.

எங்கு செல்கிறீர்கள்?
இதுதொடர்பாக அவர் தனது பேஸ்புக்கில் பதிவில், கேரளாவில் ரேஷனில் இலவச அரிசி வழங்கப்படுகிறது. ரேஷன் கார்டை எடுத்துக்கொண்டு கடந்த இரு தினங்களுக்கு முன், எனது மகனுடன் திருவனந்தபுரம் ஜவகர்நகரிலுள்ள ரேஷன் கடைக்கு சென்றேன். வழியில் என்னைப் பார்த்த ஒருவர், எங்கு செல்கிறீர்கள் என கேட்டார். ரேஷன் கடைக்கு, இலவச அரிசி வாங்க செல்கிறேன் என்றேன்.

ஏன் வெட்கப்படணும்?
இவ்வளவு பெரிய ஆளான நீங்கள், இலவச அரிசி வாங்குவதற்கு செல்கிறீர்களே? வெட்கமாக இல்லையா? என்றார். இதில் ஏன் வெட்கப்பட வேண்டும். இதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை என்று சொல்லிவிட்டு, ரேஷன் கடைக்குச் சென்று 15 கிலோ இலவச அரிசியை வாங்கிவிட்டு திரும்பினேன். வீட்டில் கடந்த சில தினங்களாக அந்த அரிசியைத்தான் சமைத்து வருகிறோம்.

அதைக் கடந்துதான்
எனது இளம் வயதில் மிகுந்த வறுமையில் வாடினேன். அப்போதெல்லாம் எங்கள் வீட்டில் ரேஷன் அரிசிதான் பொங்குவோம். அதைதான் சாப்பிடுவோம். அந்தக் காலத்தை கடந்துதான் இந்த நிலைக்கு வந்துள்ளேன். அதை மறந்துவிடவில்லை' என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து ரசிகர்கள் இவரது செயலை வரவேற்றுள்ளனர். சிலர் எதிர்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











