அல்லாடுகிறேன்.. எஸ்.பி.பியின் இழப்பை எந்த வார்த்தைக் கொண்டு நிரப்புவது? நடிகர் மோகன் உருக்கம்!
சென்னை: எஸ்.பி.பியின் இழப்பை எந்த வார்த்தைகளைப் போட்டு நிரப்புவது என்று தெரியாமல் அல்லாடுகிறேன் என நடிகர் மைக் மோகன் கூறியுள்ளார்.
பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நேற்று மரணமடைந்தார். அவர் மரணம் சினிமா துறையினரை ஒட்டுமொத்தமாக சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அவர்கள் தங்கள் இரங்கலை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

கொரோனா அறிகுறி
கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா அறிகுறி என்று அனுமதிக்கப்பட்டார் எஸ்.பி.பாலசுப்ரமணியம். பின்னர் அவர் உடல் நிலை மோசமானதால் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.

கூட்டு பிரார்த்தனை
வெளிநாட்டு மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை பெற்றும் சிகிச்சை அளித்தனர். அவர் குணமடைய ரசிகர்கள், திரையுலகினர் கூட்டு பிரார்த்தனை செய்தனர். பிறகு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. கடந்த 51 நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை திடீரென நேற்று முன் தினம் மோசமானது. அவர் நேற்று காலமானார். அவருக்கு வயது 74.

மறைந்து விட்டார்
இது ஒட்டு மொத்த திரையுலகினரையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அவர் மறைவை அடுத்து சமூக வலைதளங்களில் இரங்கல் குவிந்து வருகிறது. இந்நிலையில் நடிகர் மோகன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: இசையுலகிற்கு ஒரு கருப்பு தினம். ஏனென்றால், பாடும் நிலா நம்மை விட்டு மறைந்துவிட்டார்.

நம்ப முடியவில்லை
45,000-க்கும் அதிகமான பாடல்களைப் பாடி நம்மை எல்லாம் மகிழ்வித்தவர் இன்று நம்மிடம் இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை. இந்த இழப்பை எந்த வார்த்தைகளைப் போட்டு நிரப்புவது என்று தெரியாமல் அல்லாடுகிறேன். எஸ்பிபி சார் செய்த சாதனைகளை இனிமேல் யாராவது செய்ய முடியுமா என்று தெரியவில்லை. அவருடைய இசைப்பயணத்தில் எனக்கும் சில பாடல்களைப் பாடியுள்ளார் என்று நினைக்கும் போது மகிழ்ச்சி.

நட்பாகப் பழகக்கூடியவர்
முதல் பாடலிலிருந்து கடைசியாக பாடிய பாடல் வரை அவருடைய குரல் ப்ரெஷ் ஆகவே இருக்கும். எனக்கு தெரிந்தவரை எதிரிகளே இல்லாத மனிதர் எஸ்.பி.பி சார். அது மிகவும் அபூர்வம். அந்தளவுக்கு அனைவருடனும் மிகவும் நட்பாக பழகக்கூடியவர். எண்பதுகளில் எல்லா ஹீரோக்களுக்கும் எஸ்.பி.பி சார் பாடல்களே அமைந்திருக்கும். என்னுடைய படங்களிலும் அவர்தான் பாடியிருப்பார்.

பெருமையான விஷயம்
அவர் குரலின் மேஜிக் என்னவென்றால், எஸ்.பி.பி. சார் யாருக்குப் பாடினாலும் அவர்களே பாடுவது போல் இருக்கும். அப்படித்தான் எனக்கும் அமைந்தது. அவர் பாடிய பல பாடல்களுக்கு நான் நடித்திருக்கிறேன் என்பது எனக்கு பெருமையான விஷயம். இன்னும் பல நூறு ஆண்டுகளானாலும் அந்தக் குரல் மூலம் நமக்கு சந்தோஷத்தைக் கொடுத்துக்கொண்டே இருப்பார். அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











