எம்எல்ஏவைக் காணோம்... நடிகை சரிதாவின் மாஜி கணவர் முகேஷ் மீது போலீசில் புகார்
திருவனந்தபுரம்: கொல்லம் தொகுதி எம்.எல்.ஏ.வான நடிகர் முகேஷைக் காணவில்லை என அப்பகுதி இளைஞர் காங்கிரஸ் பிரமுகர்கள் போலீசில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல மலையாள நடிகரான முகேஷ். இவர் தமிழில் பாலசந்தர் இயக்கத்தில் ஜாதிமல்லி என்ற படத்தில் குஷ்பு ஜோடியாக நடித்தவர்.
அதுமட்டுமின்றி இவர் நடிகை சரிதாவின் மாஜி கணவர் ஆவார். இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தான் முகேஷ் - சரிதா ஜோடி சட்டப்பூர்வமாக விவாகரத்து மூலம் பிரிந்தனர்.

இந்நிலையில், கேரள சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கொல்லம் தொகுதியில் போட்டியிட்டு முகேஷ் வெற்றி பெற்றார்.
ஆனால், எம்.எல்.ஏ.வாக பதவியேற்றதோடு சரி, சமீபத்தில் கொல்லம் தொகுதியில் நாட்டு குண்டு வெடித்த சம்பவத்தின்போது அவர் தனது தொகுதிக்கு சென்று விசாரணை நடத்தவில்லை. அதோடு, முதல்வர் பங்கேற்ற பொதுக் கூட்டத்திலும் அவர் கலந்து கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் தங்கள் பகுதி எம்.எல்.ஏ.வைக் காணவில்லை என அப்பகுதி இளைஞர் காங்கிரஸ் பிரமுகர்கள் சிலர் கொல்லம் போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்த புகார் மனுவை பெற்றுக் கொண்டதாக கொல்லம் மேற்கு காவல் நிலைய போலீசார் ஒப்புகை சீட்டும் அளித்துள்ளார்.
ஆனால், சர்ச்சையைக் கிளப்பி விளம்பரம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இப்படி இளைஞர் காங்கிரஸ் பிரமுகர்கள் போலீசில் புகார் அளித்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளார் முகேஷ். கூடவே, தான் அடிக்கடி தொகுதிக்கு சென்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











