ஃபேஸ்புக்கில் கதறிய நடிகரின் பெற்றோர் வெள்ளம் பாதித்த சர்ச்சில் இருந்து மீட்பு
திருவனந்தபுரம்: கேரளாவில் வெள்ளத்தில் சிக்கிய தனது பெற்றோரை காப்பாற்றுமாறு கண்ணீர் விட்ட நடிகர் முன்னாவின் பிரார்த்தனை வீண் போகவில்லை.
கேரளாவில் பெருவெள்ளம் ஏற்பட்டு மக்கள் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். வெள்ளத்தால் வீடுகளில் சிக்கியவர்கள் தங்களை காப்பாற்றுமாறு வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
வெள்ளத்தில் மிதக்கும் கேரளா தொடர்பான புகைப்படங்களை பார்த்தாலே மனம் பதறுகின்றது. வெள்ளத்தால் ரூ. 19,500 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.
வீடியோ
மலையாள நடிகர் முன்னா சைமன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வியாழக்கிழமை வெளயிட்டார். கேரளாவில் நிலைமை இருக்க இருக்க மோசமாகியுள்ளது. என் சொந்த ஊரிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. என் அம்மா, அப்பா தேவாலயத்தில் சிக்கியுள்ளனர். அவர்கள் பூவத்துசேரியில் உள்ள புனித ஜோசப் தேவாலயத்தில் சிக்கியுள்ளனர் என்று முன்னா அந்த வீடியோவில் தெரிவித்தார்.

தேவாலயம்
அந்த தேவாலயத்தில் 2 ஆயிரத்து 500 பேர் சிக்கியுள்ளனர். உணவு, தண்ணீர் இல்லாமல் தவிக்கின்றனர். தேவாலயத்தில் வெள்ள நீரின் அளவு அதிகரித்துள்ளது. யாரிடம் உதவி கேட்பது என்றே தெரியவில்லை. என் தந்தைக்கு பிறந்தநாள். ஆனால் அவருக்கு வாழ்த்து தெரிவிக்க முடியவில்லை என்று கூறி அழுதார் முன்னா.

வெள்ளம்
பூவத்துசேரி எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ளது. பூவத்துசேரி முழுவதும் நீரில் மூழ்கியுள்ளது. எந்த மீடியாவாது பூவத்துசேரிக்கு சென்று செய்தி வெளியிட்டால் உலகத்திற்கு தெரிய வரும். நான் சென்னையில் சிக்கியுள்ளேன். உங்களின் ஆதரவும், பிரார்த்தனையும் தேவை என்றார். முன்னா வெளியிட்ட வீடியோ வைரலானது.

பெற்றோர்
முன்னாவின் பெற்றோர் நேற்று மாலை 4 மணி அளவில் பத்திரமாக மீட்கப்பட்டனர். அந்த தேவாலயத்தில் சிக்கியிருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். முன்னதாக வெள்ளம் புகுந்த வீட்டில் சிக்கியிருந்த நடிகர் ப்ரித்விராஜின் அம்மாவை ஈயப் பாத்திரத்தில் அமர வைத்து காப்பாற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மலையாள நடிகரான முன்னா பரத்தின் கண்டேன் காதலை படத்தில் தமன்னாவின் முதல் காதலராக நடித்தவர்.


Click it and Unblock the Notifications











