ஆண்கள் அனைவரும் என்னை மன்னியுங்கள்... நடிகர் நாசர் ஏன் இப்படி சொல்றாரு!
சென்னை : நடிகர் நாசர் கடந்த 37 ஆண்டுகளாக திரைத்துறையில் சிறப்பான பங்களிப்பை செய்து வருகிறார். ஹீரோவாகவும், வில்லனாகவும் குணச்சித்திர நடிகராக பல்வேறு பரிணாமங்களை அவரது நடிப்பில் பார்க்க முடிகிறது. தொடர்ந்து சிறப்பான கதைக்களங்களில் அவர் நடித்து வருகிறார்.

நடிகர் நாசர்
நடிகர் நாசர் கடந்த 37 ஆண்டுகளாக திரைத்துறையில் சிறப்பான கதைக்களங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். கோலிவுட்டில் இவரது பங்களிப்பு சிறப்பானது. நாயகனாகவும் வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் இவரை தொடர்ந்து பார்க்க முடிகிறது. நடிகர் சங்க தலைவராகவும் இவர் உள்ளார்.

லயோலா கல்லூரி கலைநிகழ்ச்சி
இந்நிலையில் லயோலா கல்லூரி கலை நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவர்களின் கேள்விகளுக்கு நாசர் பதிலளித்து பேசினார். தனக்கும் லயோலா கல்லூரிக்கும் ஆழமான தொடர்பு உள்ளதாகவும் தான் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு லயோலா கல்லூரியில் சேர ஆசைப்பட்டதாகவும் ஆனால் தனக்கு அந்த கொடுப்பினை கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

37 ஆண்டுகால பயணம்
கடந்த 37 ஆண்டுகளாக திரைத்துறையில் உள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த நாசர், எந்த துறையாக இருந்தாலும் ஒரு துறையை வேலையாக நினைத்து செய்தால், நாம் நினைத்தால்தான் ஓய்வு சாத்தியமாகும் என்று தெரிவித்துள்ளார். மற்ற வேலைகளைவிட இங்கு சம்பளம் அதிகம் என்பதால் தனது முழு முயற்சியையும் வெளிப்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.

சினிமாவும் ஒரு வேலையே
சினிமா துறைக்கு வர ஆசைப்படுபவர்கள் இதை ஒரு வேலையாக நினைத்து பயணிக்கலாம், அல்லது ஆசையாக நினைத்து பயணித்தால் குறும்படம், ஆவணப்படம் போன்றவற்றை எடுத்து சாதிக்கலாம் என்றும் நாசர் கூறியுள்ளார். எல்லாவற்றையும் விட்டுவிட்டு சினிமாவிற்கு வரும் இளைஞர்களை பரந்த கைகளுடன் தான் வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளார்.

படித்துவிட்டு திரைத்துறைக்கு வாங்க
சினிமா துறைக்கு வர ஆசைப்பட்டால் அதற்குண்டான படிப்பை படித்துவிட்டு வரவும் இளைஞர்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார். தொடர்ந்து பேசிய அவர் தன்னுடைய மனைவி கமிலா தன்னுடைய அலுவலகத்தை பார்த்துக் கொள்வதாகவும் தனக்கு பின்புலமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பக்கபலமாக மனைவி கமிலா
தான் சம்பாதித்ததை கொண்டு வருவதைவிட, சம்பாதித்ததை தயாரிப்பதில் போட்டுவிட்டு பிரச்சினையைதான் கொண்டு வருவேன் என்றும் அதை கமிலாதான் தீர்த்து வைப்பார் என்றும் கூறியுள்ளார். ஒரு பொறுப்பை பெண்ணிடம் கொடுத்தால் ஆணைவிட அவர் சிறப்பாக செய்வார் என்பது தான் கண்கூடாக பார்த்த அனுபவம் என்றும் அவர் கூறியுள்ளார்.
Recommended Video

ஆண்கள் மன்னிக்க வேண்டும்
இதை கூறுவதற்காக ஆண்கள் அனைவரும் தன்னை மன்னிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். பெண்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை முடிப்பதற்காக தங்களின் உயிரையும் கொடுப்பார்கள் என்றும் நாசர் தெரிவித்துள்ளார். இது பெண்களின் காலமாக மாறி விட்டதாகவும் ஆண்கள் சிறிது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











