நடிகர் பாண்டியன் மரணம்

மதுரையைச் சேர்ந்த பாண்டியன், பாரதிராஜாவின் மண் வாசனை படம் மூலம் நடிகரானார். பல படங்களில் ஹீரோவாக நடித்த அவர் பின்னர் 2ம் நாயகனாகவும் நடித்தார். சில படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார்.
ரஜினிகாந்த்துடன், குரு சிஷ்யன் படத்தில் அவரது தம்பியாக நடித்துள்ளார். அவர் நடித்த ஆண் பாவம் திரைப்படம் பெரும் புகழ் பெற்றது. இதையடுத்து பல படங்களில் அவர் நாயகனாக நடித்தார். 80 படங்கள் வரை பாண்டியன் நடித்துள்ளார்.
நடிகராக பிரபலமாக இருந்த காலத்தில் திமுகவில் இணைந்து பல காலம் திமுகவில் இருந்த அவர் பின்னர் அதிமுகவுக்கு மாறினார். அதிமுகவில் பெரிய அளவில் பாண்டியன் கவனிக்கப்படவில்லை. தேர்தல் பிரசாரத்திற்கு மட்டுமே அவர் பயன்படுத்தப்பட்டார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாண்டியனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவரது கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து மதுரை கொண்டு செல்லப்பட்ட பாண்டியன் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இன்று காலை அவரது உடல் நிலை மோசமடைந்தது. இதைத் தொடர்ந்து அவர் மரணமடைந்தார்.
பாண்டியன் மறைவுக்கு தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











