இனம், மொழி வேறுபாடு இல்லாம எல்லார் வீட்லயும் கொடி: திடீர்ன்னு வீடியோ வெளியிட்ட நடிகர் ரஜினிகாந்த்
சென்னை: வரும் 15ம் தேதி இந்தியா முழுவதும் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது.
Recommended Video
இதனால் பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, சூப்பர் ஸ்டார் ரஜினி தனது ட்விட்டரில் தேசிய கொடியை ப்ரோபைல் பிக்சராக மாற்றினார்.
அதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினி தனது வீட்டில் தேசிய கொடியையும் ஏற்றியுள்ளார்.

பிரதமரின் கோரிக்கையை ஏற்ற ரஜினி
தமிழ் முன்னணி நடிகரான ரஜினி அரசியலுக்கு வருவார் என, அவரது ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்தனர். அவரும் நிச்சயமாக அரசியலுக்கு வருவேன் என கூறியிருந்தார். ஆனால், திடீரென அரசியல் தனக்கு சரிபட்டு வராது என ஒதுங்கிக் கொண்டார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆளுநர் ரவியை நேரில் சென்ற ரஜினி சந்தித்தது பல கேள்விகளை எழுப்பியது. இதனிடையே, 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அனைவரும் தங்களது சோஷியல் மீடியா ப்ரோஃபைல் பிக்சரில் தேசிய கொடியை வைக்க வேண்டும் என, பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். அதை ஏற்றுக்கொண்ட ரஜினி, தனது டிவிட்டர் ப்ரோஃபைல் பிக்சரில் தேசிய கொடியை வைத்தார்.

வீட்டில் தேசிய கொடி
ரஜினியைத் தொடர்ந்து இந்தி, தெலுங்கு, மலையாள திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்கள், கலைஞர்கள் தங்களது டிவிட்டரில், தேசிய கொடியை ப்ரோஃபைல் பிக்சராக மாற்றினர். அதேநேரம் ரஜினி தனது வீட்டில் தேசிய கொடியை ஏற்றியது, பலரது கவனத்தையும் ஈர்த்தது. அதேபோல், நடிகர் விஜய்யும் அவரது வீட்டில் தேசிய கொடி ஏற்றியுள்ளார்.

ரஜினி வெளியிட்ட வீடியோ
இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரது ட்விட்டர் பக்கத்தில் திடீரென ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், தேசிய கொடியின் பின்னணியில் வெள்ளை உடையுடன் தோன்றும் அவர், சுதந்திர தினம் குறித்து பேசியுள்ளார். அனைவருக்கும் வணக்கம் கூறும் ரஜினி, இந்தியா சுதந்திரம் அடைவதற்காக பல லட்சம் பேர் தியாகம் செய்துள்ளதை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து வீடுகளிலும் கொடி
தொடர்ந்து பேசியுள்ள ரஜினி "நமது நாட்டை வணங்கும் விதமாகவும், நமது ஒற்றுமையை காட்டும் விதமாகவும், சுதந்திரப் போரட்டத்தில் உயிர் தியாகம் செய்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், சாதி, மதம், இனம், மொழி, அரசியல் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டு, எல்லாருடைய வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், "நாம் எல்லோருமே இந்தியர்கள், நம் ஒற்றுமையை தெரிவிக்கும் வகையில், வீடுகளில் தேசிய கொடியை பறக்கவிட்டு, சுதந்திர தினத்தை கொண்டாடுவோம்" என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











