யாருங்க புரளி கிளப்பறது... 'ஆண்டவன், அம்மா புண்ணியத்துல' நடிகர் செந்தில் நலம்!
சென்னை: நடிகர் செந்தில் மாரடைப்பால் காலமானதாக நேற்று இரவிலிருந்து தொடர்ந்து வந்து கொண்டிருந்த வதந்திகளை, இன்று அவரே வீடியோவில் தோன்றி மறுத்து விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் செந்தில் அதிமுகவுக்காக தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். நேற்று அவர் திருச்சியில் பிரச்சாரம் செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்ததாக செய்திகள் பரவின. இதனால் திரையுலகினர் திடுக்கிட்டு, ஒருவருக்கொருவர் விசாரித்து வந்தனர். வாட்ஸ்ஆப் குழுக்களில் அதற்குள் இரங்கல் செய்தியெல்லாம் போட ஆரம்பித்துவிட்டனர்.
ஆனால் பத்திரிகையாளர்கள், மக்கள் தொடர்பாளர்கள் பலரும் செந்திலின் அலைபேசி எண்ணுக்கு போன் செய்து விசாரித்து அவர் நலமாக இருப்பதாக உண்மையை வெளியிட்டனர். ஆனால் காலையில் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் இதே வதந்தி இன்னும் வேகமாகப் பரவியது.
இதனால் செந்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், "எல்லாருக்கும் வணக்கம். வாட்ஸ்ஆப்ல வந்ததை யாரும் நம்ப வேண்டாம். நான் நல்லாருக்கேன். அம்மா 234 தொகுதிகளிலும் ஜெயிக்கணும்னு ஆண்டவனை வேண்டியிருக்கேன். அது நல்லபடியா முடியும். தமிழ்நாடு பூரா நான் சுத்திக்கிட்டுதான் இருப்பேன். யாரோ வேண்டாத சிலபேர் இந்த மாதிரி பண்ணியிருக்காங்க. அதை யாரும் நம்ப வேண்டாம். ஆண்டவன் புண்ணியத்துல, அம்மா புண்ணியத்துல நான் நல்லாருக்கேன்," என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











