"பூவே பீர் அடிக்கும்"... சிம்புவின் பழையப் பாட்டை வைத்து புது வம்பு!
சென்னை: பீப் பாடல் மூலம் பிரச்சினையில் சிக்கியுள்ள சிம்புவின் பழைய சர்ச்சைக்குரிய பாடல்களை எல்லாம் நெட்டிசன்கள் தூசி தட்டி மீண்டும் சமூக வலைதளங்களில் உலவ விட்டுள்ளனர்.
அனிருத் இசையில் நடிகர் சிம்பு பாடியதாகக் கூறப்படும் பீப் பாடலுக்கு எதிர்ப்பும், கண்டனமும் வலுத்து வருகிறது. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இருவரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தை சட்டப்படி எதிர்கொள்வேன் என சிம்பு தெரிவித்துள்ளார். இசை நிகழ்ச்சிக்காக கனடா சென்றுள்ள அனிருத், சென்னை திரும்பியதும் கைது செய்யப்படும் சூழல் காணப்படுகிறது. இதனால் அவர் இந்தியா திரும்பும் முடிவை தள்ளி வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சூழ்நிலையில் ஏற்கனவே வெளிவந்த சிம்பு மற்றும் அனிருத்தின் சர்ச்சைக்குரிய பாடல்கள் இணையத்தில் மீண்டும் உலா வரத் தொடங்கியுள்ளன.

கொல்லாம கொன்னுட்டாடா...
அதில் ஒரு பாடலில், ‘‘கொல்லாம என்ன கொன்னுட்டாடா.. ஒரு ஆயுதம் எதுவும் தாக்காமலே..பொண்ணுங்க மனச தொறந்தா அந்த பூவே பீர் அடிக்கும்.. கண்ணை பாத்துப்புட்டு போதை ஏத்திப்புட்டு வேணாம்னு சொன்னாடா..

கடவுள் இல்ல...
சும்மா பக்கத்துல வருவா, மனச தருவேன்னு தருவா, பசங்க நிம்மதிய கெடுப்பா, ரெண்டு நாளில் மறப்பா, உன் கதையத்தான் முடிப்பா.. அட பொண்ணுங்க ஒண்ணும் ஆட்டிப்படைக்கும் கடவுள் இல்ல'' என சிம்பு பாடுவதாக உள்ளது.

வைரல்...
இந்தப் பாடலானது வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளப் பக்கங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

கவிஞரும் கூட...
நடிகராக மட்டுமல்லாமல் பாடகராகவும், கவிஞராகவும் தமிழ் சினிமாவில் திகழ்ந்து வருகிறார் சிம்பு. இதுவரை அவர் 60க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார் அவர்.

காதல் தோல்வி...
அவற்றில் ஏற்கனவே பல பாடல்கள் சர்ச்சையிலும் சிக்கியுள்ளன. தனது பெரும்பாலான படங்களில் காதல் தோல்வியில் சிக்கி, பெண்களைத் திட்டுவது போல் பாடல் அமைத்து பரபரப்பாக்குவது அவரது ஸ்டைல் எனலாம்.

லூசுப்பெண்ணே பாடல்...
ஏற்கனவே, வல்லவன் படத்தில் லூசுப்பெண்ணே லூசுப்பெண்ணே எனப் பாடி, பெண்களை அவமதிப்பதாக பிரச்சினையில் சிக்கினார். அதேபோல், வானம் படத்தில் ‘எவண்டி உன்னைப் பெத்தான்... அவன் கைல கெடச்சா செத்தான்' என்ற சிம்புவின் பாடலும் சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

சுயதணிக்கை தேவை...
பெண்களை மதிக்கிறேன், வணங்குகிறேன் என்றெல்லாம் கூறிவிட்டு, இது போல் திரைப்படங்களில் அவர்களைத் திட்டுவது போன்ற பாடல்கள் அமைப்பது, ஆண்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் பெண்கள் பற்றிய தவறான எண்ணத்தை ஊக்குவிப்பதாகவே அமையும். எனவே, சென்சாரில் இது போன்ற பாடல்கள் சமயங்களில் தப்பிக்கலாம். ஆனால், இது போன்ற பாடல்களை எழுதுபவர்கள், இசையமைப்பவர்கள், அதனைப் பாடுபவர்கள் என எல்லாரும் தங்களுக்கு தாங்களே சுயதணிக்கை செய்து கொள்வது சமூகத்திற்கு நல்லது.


Click it and Unblock the Notifications











