சினிமாவில் இருப்பவர்கள் மது, புகை, மாதுக்கு அடிமையாகக் கூடாது! - சிவகுமார்
சென்னை: சினிமாவில் இருப்பவர்கள் மது, புகை, மாதுக்கு அடிமையாகக் கூடாது என்று நடிகர் சிவகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாடலாசிரியரும் இயக்குநரும் பத்திரிகையாசிரியருமான எம்.ஜி.வல்லபன் பற்றிய பிரபலங்களின் கட்டுரைகளை 'சகலகலா வல்லபன்' என்ற பெயரில் தொகுத்துள்ளார் அவரிடம் உதவி ஆசிரியராகப் பணியாற்றி அருள் செல்வன் என்பவர். இந்த நூலை நடிகர் சிவகுமார் வெளியிட இயக்குநர் கே.பாக்யராஜ் பெற்றுக் கொண்டார்.

விழாவில் சிவகுமார் பேசுகையில், "எஸ்எஸ் வாசன், எம்ஜிஆர், சிவாஜி போன்ற மேதைகளின் ஆரம்ப கால வாழ்க்கையைத் தெரிந்து கொள்ள உதவியது பேசும் படம் பத்திரிகை. அந்தப் பத்திரிகையில்தான் எம்ஜி வல்லபன் பணியாற்றினார்.
அப்போதெல்லாம் நான் சிரமப்பட்ட போது இரண்டு வெள்ளை சட்டைதான் வைத்திருப்பேன். இரண்டு வெள்ளை சட்டை வைத்துக் கொண்டு தினமும் ஒயிட் அண்ட் ஒயிட்டில் வருபவர் இவர் என்று பேச வைத்தேன். என்னை மாதம் இரண்டு ஓவியங்கள் சிவாஜி, எம்.ஜி.ஆர். பத்மினி, சாவித்ரி என்று வரைய வைத்து 24 ஓவியங்களை பேசும் படத்தில் வெளியிட்டார் வல்லபன்.

அப்படி எனக்கு நட்பாக வந்தவர்தான் வல்லபன். கடவுள் என்பவனும் காலம் என்பவனும் கொடூரமானவர்கள். ஒருவன் கலைஞனாக இருந்தாலும் சரி, பாடகனாக இருந்தாலும் சரி, நடனம் ஆடுபவனாக இருந்தாலும் சரி, இயக்குநராக இருந்தாலும் சரி, அவனுக்கு கடவுள் புகை, மது, மாது என்கிற மூன்று சாபத்தைக் கொடுத்திருக்கிறான்.
இதை உலக அளவில் சொல்வேன். கலைஞர்களில் மறைந்தவர்கள் என்று எடுத்துக்கொண்டால் நடிகர்களும் சரி, நடிகைகளும் சரி இயக்குநர்களும் சரி பலருக்கும் புகை, மது, மாது பழக்கம் இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் 25 ஆண்டுகள் இருந்திருப்பார்கள். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம். உடல் நலம் முக்கியம். கலைஞர்களே புகை, மது, மாது என்கிற மூன்றுக்கும் அடிமையாகாமல் இருங்கள்," என்றார்.

விழாவில் நடிகர் ராஜேஷ், இயக்குனர்கள் சித்ரா லெட்சுமணன், பேரரசு, கவிஞர் யுகபாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர். நூலின் தொகுப்பாசிரியர் அருள்செல்வன் வரவேற்றார். அர்ச்சனா பிரகாஷ் நன்றி கூறினார்.


Click it and Unblock the Notifications











