தொடர்ந்து அசத்தும் நடிகர்.. 173 தொழிலாளர்களை டேராடூனுக்கு விமானத்தில் அனுப்பி வைத்த சோனு சூட்!
சென்னை: மும்பையில் சிக்கிய சுமார் 173 புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல, தனி விமானத்தை ஏற்பாடு செய்திருக்கிறார் பிரபல நடிகர் சோனு சூட்.
Recommended Video
கொரோனா லாக்டவுன் காரணமாக பொதுமக்கள் கடும் சிக்கலை எதிர்கொண்டு வருகின்றனர்.
வெளிமாநிலங்களில் சிக்கிக்கொண்ட பலர், சொந்த ஊர் திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு பலர் உதவி வருகின்றனர்.

தொழிலாளர்கள்
இந்நிலையில், நடிகர் சோனு சூட், புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் செல்ல, தனது சொந்த செலவில் தொடர்ந்து உதவி செய்து வருகிறார். விமானம் மற்றும் தனி பேருந்துகளை ஏற்பாடு செய்து அவர்களை அனுப்பி வருகிறார். கொரோனா நோயாளிகளை காப்பாற்ற பாடுபடும் மருத்துவர்கள், நர்ஸ்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் ஓய்வெடுக்க, தனது ஓட்டலை ஏற்கனவே கொடுத்திருந்தார் அவர்.

பாராட்டி வருகின்றனர்
பின்னர், 45 ஆயிரம் தொழிலாளர்களுக்கு தினமும் உணவு கொடுத்து வந்தார். இதுபற்றி பேசிய அவர், இந்த இக்கட்டானச் சூழலில், ஏசி அறையில் அமர்ந்தபடி ட்வீட் போட்டுக்கொண்டிருந்தால் எதுவும் நடக்காது என்பதால் களத்தில் இறங்கினேன்' என்று தெரிவித்திருந்தார். அவரது உதவிகளை அடுத்து சமூக வலைத்தளங்களில் அவரை பாராட்டி வருகின்றனர். மகாராஷ்டிர மாநில ஆளுநரும் அவரை சந்தித்து பாராட்டுகளைத் தெரிவித்தார்.

தனி விமானம்
சோனு சூட்டின் இந்த உதவியை அறிந்த பலரும் தங்களின் சூழ்நிலையை எடுத்துக்கூறி ட்விட்டரில் தொடர்ந்து உதவி கேட்டு வருகின்றனர். அவர்களுக்கு மறுக்காமல் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன், கேரளாவில் சிக்கியிருந்த 167 புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலமான ஒடிசா செல்வதற்கு, தனி விமானத்தை ஏற்பாடு செய்திருந்தார்.

ஏர் ஏசியா விமானம்
இந்நிலையில், மும்பையில் சிக்கிய 173 புலம் பெயர் தொழிலாளர்களை டேராடூனுக்கு விமானத்தில் அனுப்பி வைத்துள்ளார், சோனு சூட். இதற்கான மொத்த செலவையும் அவர் ஏற்றுக்கொண்டார். இதுபற்றி ஏர் ஏசியா விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறும்போது, 173 புலம் பெயர் தொழிலாளர்களுடன் ஏர்பஸ் ஏ320 விமானம் மும்பையில் இருந்து நேற்று பிறபகல் 1.57 மணிக்கு புறப்பட்டது. 4.41 மணிக்கு டேராடூன் சென்றடைந்தது' என்றார்.

மகிழ்ச்சியை தருகிறது
இதுபற்றி சோனுசூட் கூறும்போது, நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவும் எங்கள் முயற்சி இன்னும் வலுவடைந்திருக்கிறது. இதில் சென்ற பலர், விமானத்தில் இதுவரை சென்றதே இல்லை. விமானத்தின் மூலம் தங்கள் குடும்பத்தினரைச் சந்திக்க செல்லும் அவர்கள் முகத்தில் தெரியும் புன்னகை, எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது' என்றார்.

வில்லன் நடிகர்
நடிகர் சோனு சூட், விஜயகாந்தின் கள்ளழகர் படம் மூலம் நடிகராக அறிமுகமானவர். தொடர்ந்து, மஜ்னு, சந்திரமுகி, அருந்ததி, ஒஸ்தி, தேவி உட்பட பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார். தமிழ் தவிர, தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். அவர் இந்த லாக்டவுனில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து உதவி செய்துவருகிறார்.


Click it and Unblock the Notifications











