ஜனநாயகத்தில் மக்கள் தான் எஜமானர்கள்.. நடிகர் சூர்யா போட்ட புதிய ட்வீட்.. எதுக்குன்னு பாருங்க!
சென்னை: பிரதமர் மோடியின் அறிவிப்பு விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்கும் தியாகத்திற்கும் கிடைத்த வெற்றி என நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.
அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி என விவசாய சட்ட திருத்தங்களை வாபஸ் பெற்றதற்கு கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் கார்த்தியை தொடர்ந்து அவரது அண்ணனும் நடிகருமான சூர்யாவும் தற்போது இந்த விவகாரத்தில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

சமூக அக்கறை
நடிகர் சூர்யா கமர்ஷியல் ஹீரோவாக நடித்து வந்த நிலையில், தற்போது கருத்துள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் என ஜெய்பீம் திரைப்படத்திற்கு பிறகு ஏகப்பட்ட ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அகரம் அறக்கட்டளை தொடங்கி மாணவர்களுக்கான கல்வியை கொடுத்து வரும் பணியை பல ஆண்டுகளாக செய்து வரும் நடிகர் சூர்யா சமூக அக்கறை கொண்ட கருத்துக்களை கொஞ்சமும் தயங்காமல் கூறி வருகிறார்.

ஜெய்பீம் சர்ச்சை
ஜெய்பீம் திரைப்படம் லாக்கப் டெத் மற்றும் நீதியரசர் சந்துருவின் கதையை மையப்படுத்தியும் இருளர் இன மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் எடுக்கப்பட்ட நிலையில், அந்த படத்தை பலரும் பாராட்டினர். ஆனால், உண்மை கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில் ஏன் தேவையில்லாமல் வன்னியர்களை இழிவாக சித்தரித்தனர் என பாமகவினர் ஜெய்பீம் சர்ச்சையை கிளப்பி உள்ளனர்.

எதிர்ப்பும் ஆதரவும்
இந்த விவகாரத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் சினிமா பிரபலங்கள் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் சூர்யாவுக்கு ஆதரவு அளித்த பிரபலங்களுக்கு நன்றி தெரிவித்தும் அன்புமணி ராமதாஸ் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தும் சூர்யா தனது நிலைபாட்டில் பின் வாங்காமல் இருந்து வருகிறார்.

பொங்கல் ரேஸில் இல்லை
எதற்கும் துணிந்தவன் திரைப்படம் டிசம்பர் மாதமே வெளியாகும் என முன்னதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த திரைப்படம் பொங்கலுக்கு தல அஜித்தின் வலிமையுடன் போட்டி போடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சன் பிக்சர்ஸ் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட அறிவிப்பில் பிப்ரவரி 4ம் தேதி திரையரங்குகளில் எதற்கும் துணிந்தவன் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் தான் எஜமானர்கள்
இந்நிலையில், நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், "உழவே தலை விவசாயிகளின் அறப்போராட்டம் வென்றது நம்பிக்கை அளிக்கிறது. ஜனநாயகத்தில் மக்கள் தான் எஜமானர்கள். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த அரசின் முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது. உறுதியாக இறுதிவரை போராடிய விவசாய பெருமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..." என பதிவிட்டுள்ளார்.

முந்திய தம்பி
"மூன்று விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக நம் பிரதமர் அறிவித்திருப்பது, தங்கள் உயிரையை ஈந்து போராடிய எளிய வேளாண் மக்களின் ஒருவருட இடைவிடாத போராட்டத்திற்கு கிடைத்திருக்கும் வரலாற்று வெற்றி. போராடியவர்களுக்கும் புரிந்து கொண்ட அரசுக்கும் அன்பும் நன்றியும்." என அண்ணனை முந்திய தம்பியாக நடிகர் கார்த்தி முன்னதாகவே தனது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பான கருத்தை முன் வைத்து இருந்தார். அண்ணனும் தம்பியும் சமூக அக்கறை கொண்ட விவகாரத்தில் தயங்காமல் கருத்து கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











